Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

தமிழ்ப்பேரறிஞர் ந.சி. கந்தையாபிள்ளை

- தமிழவேள் இ.க. கந்தசாமி

ஈழத்திருநாடு, பண்டைய புராண இதிகாசங்களிலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப் பெற்றுள்ளது. திருமூலர் இந்நாட்டைச் சிவபூமி எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைப் போல ஈழத்திருநாடும் பண்டைக்காலம் முதல் தமிழ்மொழிக்கும் சிவவழிபாட்டுக்கும் நிலைக்களனாக இருந்து வருகிறது. ஈழத்திருநாடு, நிலப்பரப்பிற் சிறியது. எனினும் தமிழ், சமயம் ஆகியவற்றின் வளர்ச்சிகளுக்குப் பெரும்பணிகள் செய்துள்ளது. பெரும்புலவர்களும் அறிஞர்களும் இத்திருநாட்டில் வாழ்ந்து தமிழ் வளர்ச்சிக்குச் சமய வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப் பெரும் பணிகள் செய்துள்ளனர்! இத்தகைய பேரறிஞர்களுள் தமிழ்ப்பேரறிஞர் ந.சி. கந்தையாபிள்ளையும் ஒருவர்.
இவர் யாழ்ப்பாணத்துக் கந்தரோடை என்னும் சிறப்பு மிகு ஊரில், நன்னித்தம்பி சின்னத்தம்பி என்பவருக்கு மகனாக 1893ஆம் ஆண்டு பிறந்தார். தமது இளமைக்கல்வியைத் தம் ஊர்த் தமிழ்ப் பாடசாலையிற் கற்றார். ஆங்கில மொழியையும் நன்கு கற்றார். தொடக்கத்தில் தம் ஊர்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்பு மலேசியா சென்று புகை வண்டி நிலைய அதிபராகப் பணிபுரிந்து, மீண்டும் தம் ஊருக்கு வந்தார். தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளைத் திருமணம் செய்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உளர்.
மறைமலையடிகள் 1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் “தமிழ் நாகரிகம்” பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார். இச்சொற்பொழிவு, ந.சி. கந்தையாபிள்ளையின் உள்ளத்தை மிகக் கவர்ந்தது. சொற்பொழிவு நிறைவில் இவர்அடிகளாரிடம் சென்று அச்சொற்பொழிவை நூலாக வெளியிடும்படி வேண்டியதோடு இதனை வெளியிடுதற்கு உரிய பணத்தைத் தமது நண்பர்களின் உதவியோடு அடிகளிடம் கொடுத்தார். நூல் வெளிவரநிதி உதவிய இவரது பணியைப் பெரிதும் பாராட்டி “வேளாளர் நாகரிகம்” என்னும் தமது நூல் முன்னுரையில் அடிகளார், எழுதி உள்ளார். தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் இவர் வைத்திருந்த பெரும் பற்று இதனால் புலனாகிறது.
மறைமலையடிகளின் சிறப்புச் சொற்பொழிவினால் தமிழ் ஆர்வம் பெற்ற இவர், தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆகியவற்றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இத்தகைய ஆராய்ச்சிக்கு ஈழநாட்டில் தக்க வாய்ப்புகள் இல்லாமையால் தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டார். உலக நாடுகளில் உள்ளவர்கள் தமிழ்மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் வரலாறு, இறைவழிபாடு ஆகியவை பற்றி எழுதிய நூல்களை ஆராய்ந்தார். இவர் பெற்றிருந்த ஆங்கில அறிவு, இதற்குத் துணை ஆகியது. மேற்கூறிய துறைகளுக்குத் தக்க ஆதாரமான பகுதிகளைக் குறித்துக் கொண்டார். மேலும் இவற்றிற்கு உதவ வல்ல தொல்பொருள் ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டார்.
இவை அனைத்தையும் பயன்படுத்தித் “தமிழ்மொழி, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழகம், தமிழ் இந்தியா, திராவிட நாகரிகம், சிவவழிபாடு, முச்சங்கங்கள், சிந்துவெளி நாகரிகம். தமிழர் ஆரியர் கலப்பு” ஆகிய அரிய நூல்களை எழுதி வெளியிட்டார். முதலில் இப்பணிக்காக ஒற்றுமை நிலையத்தை நிறுவிப் பணி செய்தார். பின்பு முத்தமிழ் நிலையமும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் இவரின் சில நூல்களை வெளியிட்டன. பின்பு ஆசிரிய நூற் பதிப்புக்கழகம் இவரது நூல்களை வெளியிட்டது. இவரது நூல்கள் தமிழின் தொன்மையையும் தமிழர் நாகரிகத்தின் சிறப்பையும் விளக்குவன. உலகத் தொடக்க காலத்தில் தமிழ்மொழியும் தமிழினமும், உலகம் முழுவதும் பரவி இருந்தன என்பதைத் தக்க பல சான்றுகளோடு தெளிவு படுத்தியுள்ளார். தமது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக வெளிநாட்டறிஞர்கள் எழுதியுள்ள பகுதிகளைத் தம் நூல்களில் அடிக்குறிப்பாகவும் பிற்சேர்க்கையாகவும் இணைத்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் காணப்படும் மிகத் தொன்மையான உருவங்களையும் தம் நூல்களில் வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்தும் தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை தரும் உயரிய ஆக்கங்கள், தொடக்கத்தில் இவரது ஆராய்ச்சிகளைப் பலர் ஏற்கவில்லை. ஆனால் நாளடைவில் அறிஞர் பலர், இவர் எழுதிய ஆராய்ச்சி முடிவுகளின் வழியில் நூல்களை எழுதியுள்ளனர். வட அமெரிக்கக் கொலரடோப் பள்ளத்தாக்கில் அழிவுற்ற நிலையில் மிகப்பழைய சிவாலயம் உள்ளது என முதலில் வெளிப்படுத்தினார். திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகத்திலும் உயர்ந்ததும் பழைமையானதும் என்பது இவரது உயரிய கோட்பாடு ஆகும்.
இவரது ஆராய்ச்சி முடிபுகளை, மா. இராசமாணிக்கனார், கா. அப்பத்துரைப்பிள்ளை, பாரதிதாசன், ஈ.வெ.ரா. ஆகிய பேரறிஞர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவே தாம் இந்நூல்களை எழுதியதாக இவர் தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இவ்வகை நூல்களே அன்றி வேறு பலதுறைகளில் தம் மனஉணர்வுகளையும் ஆற்றலையும் பயன்படுத்திப் பயன்தரு பலநூல்களை எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் வேண்டும். இந்நூல்களை அறியாதவர்கள் தமிழராகார் என்பது அறிஞர் ஒருவர் கருத்து. இவரும் இக்கருத்து உள்ளவர். ஆகவே சங்க இலக்கிய நூல்களைக் கற்றோரேயன்றி ஏனையோரும் அறிதல் வேண்டும் என்னும் ஆர்வத்தினால் செய்யுள் அமைப்பில் உள்ள சங்க இலக்கியங்கள் அனைத்தையும் அச்செய்யுள் அமைப்பின்படி உரைநடையில் எழுதி வெளியிட்டார். சைவ சமய அறிவைச் சைவமக்களிடையே பரப்ப எண்ணிய நாவலர், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதி வெளியிட்ட பணியை, இவரது இப்பணி உணர்த்துகிறது.
புறநானூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறப்பொருள் விளக்கம் முதலிய உரைநடை நூல்களை மேற்கூறிய நோக்கத்தோடு இவர் வெளியிட்டுள்ளார். பண்டிதரே அன்றிப் பள்ளிச் சிறார்கள் இந்நூல்களை அறிய வேண்டும் என்பதற்காக இந்நூல்களைத் தாம் எழுதியுள்ளதாகப் புறப்பொருள் விளக்கம் என்னும் நூலில் இவர் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளின் பயன்பாடு நோக்கி திருக்குறளுக்கு அரிய உரை எழுதி இவர் வெளியிட்டுள்ளார். தமிழகச் சான்றோர் எழுதிய திருக்குறள் உரைக்கும் இவ் ஈழத்து அறிஞர் எழுதிய உரைக்கும் நுட்பமான வேறுபாடுகள் உள. திருக்குறள் முதல் நான்கு அதிகாரங்களையும் பரிமேலழகர் முதலியோர் பாயிரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியம் செய்யுள் இயலின் வழி இதனை இவர் வாழ்த்தியல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ந.சி. கந்தையாபிள்ளை அகராதித்துறையில் மற்றெவரும் செய்யாத அளவு மிகப் பெரும்பணி செய்துள்ளார். செந்தமிழ் அகராதி, திருக்குறள் அகராதி, புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி என்பன இவர் எழுதி வெளியிட்ட அகராதி நூல்கள். இவ் அகராதிகள் தனித்துவமான சிறப்பும் பயன்பாடும் உள்ளவை. இவற்றுள் காலக்குறிப்பு அகராதி இவரது உன்னதமான ஆக்கமாக விளங்குகின்றது.
இவரது பிறதுறை நூல்களுள் ஒன்று ‘பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்’ என்பது. இந்நூலில் பழங்காலப் பெண்கள், சமூகத்தில் பெற்றிருந்த உயர்நிலையை எழுதியுள்ளார். இவர் எழுதிய இன்னொரு நூல் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்பது. மக்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்நூல் பயன்படும் என இவர் எழுதியுள்ளார். யாழ்ப்பாணச் சங்கத்தலைவர் ஒருவர் இந்நூலைப் பாராட்டியுள்ளார். பல்வேறு குலங்களில் நிலவியிருந்த பழக்க வழக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இவர் எழுதிய இன்னொரு நூல் ‘றொபின்சன் குருசோ’ என்பது, இவர் வரலாற்று ஆராய்ச்சியில் மிக ஈடுபாடு உள்ளவர் என்பதும் பிரயாண இலக்கியத்தை அறிமுகம் செய்வதில் ஆர்வம் உள்ளவர் என்பதும் புலனாகின்றன.
இவர் எழுதிய ‘அறிவுரைக்கோவை’. ‘உங்களுக்குத் தெரியுமா’ ஆகிய இரு நூல்களும் இவரின் அறிவு நிலைப்பாட்டை உணர்த்துவன. இவ்இரு நூல்களும் இவரது உன்னதமான படைப்புகள். இவ்வுலகில் உயிர் உள்ளன உயிர் இல்லாதன ஆகிய அனைத்தையும் பற்றிய எல்லாத் தகவல்களும் இந்நூல்களில் உள்ளன. இந்நூல்களில் இல்லாதன எவையும் இல்லை எனக் கூறக்கூடிய அளவுக்கு ஒரு நிறைவான பணியை அறிஞர் ந.சி. கந்தையாபிள்ளை நிறைவு செய்துள்ளார்.
இவர் அறுபதுக்கு மேலான மிக அரிய நூல்களை எழுதியுள்ளார். பலர் சேர்ந்து எழுதக்கூடிய நூல்களை இவர் தனித்து எழுதி நிறைவு செய்துள்ளார் என்பதை எண்ணும்போது இவரது வியத்தகு ஆற்றல் புலனாகிறது. இவரது அனைத்து நூல்களும் உயர்ந்து விளங்குகின்றன. இவரது நுண்மாண் நுழைபுலம் கடலிலும் பரந்தது. மலையிலும் உயர்ந்தது. தமிழுக்கும் தமிழுலகிற்கும் என வாழ்ந்த இவர் 1960இல் இலங்கை வந்து 1967இல் அமரர் ஆனார். 74 ஆண்டுகள் வாழ்ந்தார். இவருடைய மகள் கனடா சென்றார். இவருடைய பிள்ளைகள் இவரது நூல்களைப் பாதுகாக்க முன்வரவில்லை. செந்தமிழ் அகராதியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. ஏனைய நூல்களைத் தமிழகப் பதிகப்பகம் ஒன்று வெளியிட்டு உதவியுள்ளது.
வடமொழிக்கும் ஆரிய இனத்திற்கும் உயர்வும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் தாழ்வும் கூறும், பல்வேறு கதைகளும் செய்திகளும் ஆரியரால் எழுதப்பெற்றன. இவை வரலாற்று ஆய்வுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத இவற்றை எதிர்த்த மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை போன்ற அறிஞர்களைப் போல இவர் மிக வேதனையுற்றார். தமிழர் அகக் கண்களைத் திறக்கவே தமது இந்நூல்களை எழுதுவதாக இவர் குறிப்பிட்டுள்ளார். தமிழையும் தமிழினத்தையும் பாதுகாப்பதற்காகத் தம் வாழ்க்கையை ஈடுபடுத்தினார் இவர். தமிழையும் தமிழினத்தையும் உயர்த்த முயன்ற தமிழ்ப் பேரறிஞர்களுள் இவரும் ஒருவர். ஆனால் ஏனைய அறிஞர்களிலும் பார்க்க மிகமேலான பெரும் பணிகள் செய்துள்ளார்.
தம் பெரும் பணியை நிறைவு செய்ததற்காகப் பெரும் ஆராய்ச்சி நூல்களையும் பெரும் அறிவியல் வகை நூல்களையும் எழுதித் தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். இவரது நூல்களினால் இற்றைத் தமிழினம் அறியாமையில் இருந்து விடுபட்டு வருங்காலத்தில் உயர்வும் முதன்மையும் பெறும். இத்தமிழ்ப் பேரறிஞர், தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெரும் எழுச்சியும் மறுமலர்ச்சியும் தந்த தவத்திரு மறைமலையடிகளார் போலத் தமிழிலும் தமிழினத்திலும் தமிழகத்திலும் சிவநெறியிலும் பெரும் பற்று உள்ளவர். இவர் தம் பெரும் பணிகளினால் ஈழத்திற்கு, உலகில் பெரும்புகழ் பெற்றுத் தந்துள்ளார். இவர் ‘ஈழத்தின் மறைமலையடிகள்’ என்போம். இவர் தமிழ்ப் பெரும் பணியில் ஈடுபடக் காரணமாக இருந்தவர் அடிகளாரே ஆவர்.
இப்பேரறிஞரைத் தமிழுலகு போற்றவும் இவர்வழி வாழவும் பெரிதும் கடமை பெற்றுள்ளது.
__________

0 Comments:

Post a Comment

<< Home