தமிழ் மாருதம்

Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

என்னுரை

தமிழ்நலம் சான்றீர்!
கனிந்த வணக்கம்.

[கடந்த பதினாறு ஆண்டுகளாக அச்சில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் மாருதத்தின் கட்டுரைகளை, உலகத் தமிழர்களின் நுகர்விற்காக, இணயத்தில் இந்த வலைப்பூவின் மூலம் வெளியிடுகிறோம்.]


தொல்காப்பியர், ஓர் ஆண்டை ஆறுபெரும்பிரிவாகப் பிரித்தார். அவை: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. ஆவணித் திங்களில் தொடங்கி, ஆடித்திங்களுடன் முடிவடையும் பருவங்கள். பருவம் ஒன்றினுக்கு இரு திங்களாக ஆறு பருவத்திற்குப் பன்னிரண்டு திங்கள்! சித்திரை, வைகாசி எனும் இரண்டும், இளவேனிற் பருவம்! சிலப்பதிகாரத்தில் ‘வேனிற்காதை’ என்பதொன்றுண்டு. புலவர்களால் போற்றப்படுவது இவ் ‘வேனில்’. ‘தமிழ்மாருதம்’ தொடங்கியது, இளவேனிலாகிய சித்திரையில்! ஆண்டு பதினைந்து நிறைவுற்றது. இத்திங்களில் பதினாறாம் ஆண்டில் தன் முத்திரைiயைப் பதிக்கின்றது. இதழ், தமிழ் மணம் பரப்பவும்; தமிழினம் முன்னேறவும் தொடர்ந்து பாடுபடும். நாம் என்னதான் கூக்குரலிட்டாலும், மழலையர் பள்ளி முதல் உயர் கல்விவரை தமிழ்வழிக் கல்வி எனும் நிலை வாராதவரை தமிழுக்கு ஆக்கமென்பது கிஞ்சித்துமில்லை!வழக்கம் போல் கட்டுரைகள், கவிதைகள் உள்ளன.

நன்றி!
வாழ்க தமிழ்!

அன்பன்

முனைவர் ச. சாம்பசிவனார்

அசுணம் - மாசுணம் முரண்பாடு

அ. பாண்டியன், எம்.ஏ., எம்.ஃபில்.,

சென்ற இதழில் (மார்ச்சு) 2006 அசுணமா என்ற கட்டுரையைப் படித்தேன், அதில் அசுணமும் மாசுணமும் பெரும் பாம்பு என்ற முடிவிற்கு வரலாம் எனக் கட்டுரையாளர் கூறியிருப்பதில் முரண்பாடு உள்ளதாகத் தெரிகிறது.
1. அசுணம் என்பது இசையறியும் ஒருவகைப்புள் எனவும், ‘மாசுணம்’ என்பது பெரும்பாம்பு எனக் கழகத்தமிழ் அகராதியும், கதிரைவேற்பிள்ளை தமிழ் அகராதியும் குறிப்பிடும்.
2. பாம்பின் பெயர் : அரவு, கட்செவி, சர்ப்பம், நாகம், மாசுணம், எனப்பல பெயர்களும்.
அசுணமாவின் பெயர் : கேகயம் என்றோதும் எனப்பறவை பெயரிலும் சூடாமணி நிகண்டு கூறுகிறது.
3. அசுணம், கேகயம், பறைப்பகை, இசைப்பிரியி எனவும் மாசுணம் என்பது பாம்பெனவும் நாமதீப நிகண்டு கூறுகிறது.
4. கேகயம் என்பது பறவையினம் என்றும், அது மயிலைக் குறிக்கும் சொல் என்றும் அகராதிகள் இயம்புகின்றன. ஆக ‘அசுணம்’ என்பது பறவையினம் என்பது புலனாகிறது.
“சிவபெருமானுக்கு மாசுணக்கங்கணன், மாசுணக்கச்சையன் எனும் பெயர்கள் உண்டு. கையிலும் இடுப்பிலும் பாம்பை அணியாகக் கொண்டுள்ளதால் இப்பெயர்கள் வழங்குகின்றன.
“உலவு நீள சுணமா” உலவு - உலவுகின்ற; நீள --- நீளமான, நீண்ட; சுணம் ---அழகிய தேமல்; மா --- விலங்கு, மானினம் எனப் பொருள் கொண்டால் ‘சுணமா’ என்பது பாம்பைக் குறிப்பதாகாதன்றோ?
“முரசொலி கேட்ட அசுணமென்
புள்ளின் மூச்சவிந்து” இதில் அசுணம் என்பது பறவையைக் குறிக்குமெனில், அது கற்பனையாகாது. புராணத்தில் சுட்டப்பட்டிருப்பதாலேயே பறவைகளும் விலங்குகளும் கற்பனையாக மாட்டா.
“இன்னளிக்குரற் கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து” (சீவக சிந்தாமணி 1402)
“இனிய இசைகேட்ட அசுணமா போல மகிழ்வெய்தினாள்” என்பதில் அசுணம் என்பதொரு இசையறியும் விலங்கு அல்லது பறவை எனக்கூறுவர் என்று உரையாசிரியர் கூறியிருப்பதால், அசுணம் என்பது விலங்கு என்ற முடிவிற்கும் வரஇயலாது.
“கரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஒர்த்து எழீஇப் பாடுகின்றான்” (சீவகசிந்தாமணி 723)
இதில் யாழைச் சீவகன் மீட்டக் கேட்ட பறவைகளும் விலங்குகளும் சோர்வுற்றதாக அறிகிறோம். இசையறிவுள்ள பறவைகளும், விலங்குகளும் உண்டு என்பது புலனாகிறது.
எனவே ‘அசுணமா’ என்பது இறையறிப்பறவையெனவும், ‘மாசுணம்’ என்பது இசையறி விலங்கு எனவும் கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
____________

திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள்

உ. கருப்பத்தேவன், எம்.ஏ., எம்.ஃபில்.,

முன்னுரை

மாணிக்கவாசகர் பாடிய எட்டாம் திருமுறையாகிய திருவாசகம் மிகச்சிறந்த சிவநெறிப் பனுவல் ஆகும். பக்தி இலக்கியங்களுள் தலைமை சான்றது. உயிர்களைப் பிணித்துள்ள வலிய தளைகளை நீக்கிப் பேரின்பத்தைத் தரும் இயல்புடையது திருவாசகமாகும். இறைவனுக்கே தம்முடைய கருவி கரணங்களை அர்ப்பணம் செய்து, சிவனைக் கண்டு இன்புற்று வழிபட்ட மாணிக்கவாசகரின் இறைவழிபாட்டு நெறியில், இறையன்பில் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. ‘திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள்’ என்னும் பொருளில் அமைந்துள்ள இக்கட்டுரை, அதனை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைப்பதாக அமைகின்றது.
வழிபாடு பற்றிய விளக்கங்கள்
கருணை வள்ளலும் அருட்குரவனுமான இறைவனை, உயிர்கள் தங்கள் பக்குவநிலைகளுக்கு ஏற்பத், தம்முள் பதித்து வைத்துள்ளன. தம்முள் பதிந்த இறை உருவங்களில் மனத்தைப் பதித்த உயிர்கள், அவ்வுருவங்களோடு ஒன்றி விடுகின்றன. இதனால் உயிர்கள் அமைதியும் இன்பமும் பெறுகின்றன.
“ ‘வழிபாடு’ என்ற சொல்லுக்கு, “வழியில் செல்லுக, பின்பற்றுக, வணக்கம், பஜனை, சமயக்கோட்பாடு” முதலான’ பல பொருட்களைக் கழகத் தமிழகராதி தருகின்றது, ‘வழிபாடு’ என்பது ‘வழிபடுதல்’ என்னும் பொருளுக்குரிய சொல்லாகும். ‘வழிபடு’ என்னும் தொழிற்பெயர், பெயர்ச் சொல்லாக மாறும்போது ஈற்றயல் நீண்டு வழிபாடு என்றாகின்றது. ‘பண்படு’ என்னும் சொல் ‘பண்பாடு’ என்றாகியது போல இச்சொல்லும் உள்ளது. ‘வழி’ என்பதற்கு ‘நெறி’ என்றும் ‘படு’ என்பதற்குச் ‘செல்லுதல்’, ‘பொருந்துதல்’, என்றும் பொருள் கற்பிக்கப்பட்டு இறையடியவர்களும் ஞானிகளும் அறிஞர்களும் காட்டியுள்ள நெறியில் செல்லுக என்று அறிவுறுத்தும் பாங்கில் இச்சொல் இன்று ஆளப்பட்டு வருவதைக் காண்கின்றோம். இறைவனை, வழிபாட்டுச் சொற்களைக் கொண்டு பாமாலை தொடுத்து வழிபடுவதை, நாம் வழிபாடு எனக் கொள்ளலாம்.
மூவகை வழிபாடு
வழிபாடு இலிங்க வழிபாடு, குர வழிபாடு, சங்கம வழிபாடு என மூவகைப்படும். எல்லாவற்றுக்கும் முதலாகவும் முடிவாகவும் விளங்கும் சிவனை வழிபடுவது சிவவழிபாடு அல்லது இலிங்கவழிபாடு ஆகும். அவ்விறைவனை வழிபடும் நெறியை அறிவுறுத்தும் ஆசிரியர்களைப் போற்றி வழிபடுவது குருவழிபாடு என்றழைக்கப்பெறும். இத்தகைய வழிபாட்டின் பயன்கள் என்றும் நிலைத்து நிற்றல் வேண்டி இறையடிவர்களை வணங்குவதுடன் அவர்களுடன் உறைவது சங்கம வழிபாடு ஆகும். இம்மூன்று வழிபாட்டு நெறிகளையும் பரஞ்சோதி முனிவர் தம்முடைய திருவிளையாடற் புராணத்தில் வேதத்திற்குப் பொருளருளிச் செய்த படலத்தில் விளக்குகின்றார்.
“கிரியையால் ஞானம் தன்னால் கிளர்சிவ பத்தி, பூசை
தரிசனம் சைவலிங்க தாபனம் செய்தல் ஈசற்கு
உரிய மெய்யன்பர் பூசை உருத்திர சின்னம் தாங்கல்
அரியதே சிவன்பாற் பத்தி அனைத்தையும் தெரியலாகும்” (பாடல் எண் 4)
இப்பாடலின் வழி இலிங்க, குரு, சங்கம வழிபாட்டினைச் சிவனே கூறுவதாகப் பரஞ்சோதியார் பாடியுள்ளார். வேதத்திற்குப் பொருள் சொல்லும் பாங்கில் கிரியைகளாலும் ஞானங்களாலும் அறியக்கூடிய வழிபாடுகளை, அவர் கூறியுள்ளார். விளக்கம் தரும் சிவபக்தி, சிவபூசை, சிவதரிசனம், சிவலிங்கம் நிறுவுதல், சிவனுக்கு மெய்யடியார்கள் செய்யக்கூடிய பூசைகள், சிவசின்னம் தாங்குதல், அரிய குருபக்தி ஆகிய அனைத்தையும் மறைவழி உணரலாம் என்று சிவன் கூற்றாக வைத்துப் பாடியுள்ளார் பரஞ்சோதி முனிவர். பெரியபுராணத்துள் சங்கம வழிபாட்டினையும் திருவிளையாடற் புராணத்துள் சிவலிங்க வழிபாடு, குருவழிபாடு ஆகிய இரண்டினையும் பரவலாகக் காணுகின்றோம்.
நால்வர் வழிபாட்டு நெறி
ஆன்மா, இறைவனைச் சார்ந்து இன்புறுதலையே ‘முக்தி’ என்று ஆன்றோர் குறிப்பிட்டுள்ளனர். முக்தி அடைவதற்குரிய வழிபாட்டு நெறிமுறைகளைத் தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் நான்காகப் பகுத்துக் கூறியுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். இவற்றை முறையே தாச மார்க்கம் என்னும் தொண்டு நெறி, சற்புத்திர மார்க்கம் என்னும் நன்மகன்மை நெறி, சகமார்க்கம் என்னும் தோழமை நெறி, சன்மார்க்கம் என்னும் ஞானநெறி எனக் கூறியுள்ளனர். திருநாவுக்கரசர் தொண்டு நெறியிலும், திருஞானசம்பந்தர் நன்மகன்மை நெறியிலும், சுந்தரர் தோழமை நெறியிலும், மாணிக்கவாசகர் ஞானநெறியிலும் நின்று இறைவனை வணங்கி வழிபட்டு வந்துள்ளனர்.
திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள்
உயிர்கள், தம்மை அறிந்துகொண்டு தெளிந்த நிலையில் எளிய முறையில் இறைவனைக் காண்பதற்குப் பயன்படும் படிநிலையே வழிபாடாகும். மாணிக்கவாசகர் பக்திநெறி, மறையவர்களின் வேதநெறி, அன்புநெறி ஆகிய மூன்று நெறிகளையும் ஒருங்கே பெற்றவர். அவர் சைவ சமயத்தைத் தம் சிவ வழிபாட்டால் வளர்த்தார். வழிபாடு என்னும் பூசை, சைவ மரபின் இன்றியமையாத கூறு ஆகும். உடல், உள்ளம், உயிர் ஆகியனவற்றின் குற்றங்களைக் களைவதற்கு மேற்கொள்ளும் பயிற்சியே வழிபாடு ஆகும். மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகப் பாடல்களில் மனம், வாக்கு, மெய் ஆகிய மூன்றினையும் இறையின்பத்தைத் துய்ப்பதற்காகவே பயன்படுத்தியதாகப் பாடியுள்ளார். அவர் பரம்பொருளாகிய சிவனை மனம் நினைக்கவும், வாய் வாழ்த்தவும், கை வணங்கவும் ஒருமித்த சிந்தனையுடன் வழிபட்டார். “மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்த” வழிபாட்டு நெறியில் அவர் சிவத்தைக் கண்டார். பரம்பொருளாகிய சிவத்தை இமைப்பொழுதும் மறவாமல் நினைந்து அதிலேயே அழுந்தி நின்று இறைவன்முன் மனமொன்றிய வழிபாட்டினை - இறையருட் செயலை உணர்த்துவது மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் ஆகும். இறையன்பில் இன்பமும், உலக அன்பில் பற்றும் இல்லாத இறையடியவர்களுக்கு மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் காட்டும் வழிபாட்டுமுறை, ஒளியூட்டி வழிகாட்டுவதாகும். ஊன், உயிர், உணர்வு, உள்ளம் ஆகியன கெட்டு, பித்த நிலையில் சிவபரம்பொருளோடு ஒன்றுபட்ட நிலையில் வழிபட்ட மாணிக்கவாசகரின் வழிபாட்டு முறைகளைத் திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகமும் வெளிப்படுத்துகின்றது. திருவாசகம் காட்டும் வழிபாட்டு முறைகளை, 1. பேரின்பத்தில் திளைத்தல்; 2. அகங்குழைந்து வழிபடுதல்; 3. இறையருளோடு கலத்தல்; 4. இறையன்பில் உறுதி; என வகைப்படுத்தி இக்கட்டுரையில் விளக்கலாம்.
1. பேரின்பத்தில் திளைத்தல்
ஆன்மா சில சமயங்களில் தான் பெற வேண்டிய பேரின்பத்தை மறந்து உலக இன்பங்களைத் துய்ப்பதன் மூலம் துயரமடைகின்றது. பேரானந்தத்தைத் தரக்கூடிய பரம்பொருளாகிய சிவனைச் சேர்ந்திருக்கும்போது ஆன்மா தூய்மை பெறுகின்றது. சிவனின் கருணை, உள்ளம் கலந்து உணர்வாக நின்று உள்ளத்தை உருகச்செய்யும் இயல்புடையதாகும். அக்கருணையை இறையருளால் - இறைவழிபாட்டால் பெறமுடியும் என மனம் நைந்து மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுகின்றார். சிவன், தன்பால் பக்தியும் அன்பும் கொண்ட இறையன்பர்களின் மனத்துயரங்களைத் தீர்த்து அருள்பாலிக்கின்றார். அவ்வாறு இறையருள் பெற்ற மாணிக்கவாசகரின் உள்ளம் உருகுகின்றது. பேரின்பத்தில் திளைக்கின்றது. இறைவழிபாட்டின் இந்நிலையில் நின்று மாணிக்கவாசகர் அச்சோப்பதிகத்தில்,
“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (1)
எனப்பாடுகின்றார். இவ்வாறு அவர் சிவபரம்பொருளாகிய பேரின்பத்தில் அழுந்திநின்று பரத்தைச் சார்தல் வேண்டும் என இறைவனிடம் முறையீடு செய்கின்றார்.
@2. அகங்குழைந்து வழிபடுதல்
ஆன்மாவிற்கு இறைவன்மேல் தீராத பக்தி வேண்டும். இறைவனது பேராற்றலை அடைய விரும்பும் இறையடியவர்கள், என்றும் மாறாத பக்தியால் தங்களை இறைவனிடம் அடைக்கலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” (சிவஞானபோதம், 8)
என்னும் சிவஞானபோத சூத்திரம், ஐம்புல இன்பங்களில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்குச் சிவன் ஞானாசிரியனாக வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான் எனக் குறிப்பிடுகின்றது. இறைவழிபாட்டில் இத்தகைய உண்மை ஞானத்தை மாணிக்கவாசகர் மிக எளிதாகவே பெற்றார். அந்த உணர்வின் வெளிப்பாடாகவே அவர் திருவாசகத்தில், இறைவழிபாட்டில் “மயிர்சிலிர்த்தல், நடுக்கம் உண்டாதல், கண்ணீர் அரும்புதல்” என்னும் வழிபாட்டு முறைகளைப் பாடியுள்ளார்.
“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி” (திருச்சதகம், 1)
இந்த நிலையில்தான் மாணிக்கவாசகர் தமது பேரன்பினால் இறைவனை நினைத்து அழுது, மனம்உருகி, அகம் குழைந்து வழிபடுகின்றார்.
3. இறையருளோடு கலத்தல்
இறையருள் நிலையில் ஆன்மாவானது தானே எதனையும் செய்வதாகக் கருதாமல், இறையருள் செய்விக்கத் தான் செய்வதாகக் கருதிச் செயல்படுகின்றது. குருவாக எழுந்தருளி, தன்னருள் வலிமையால் ஞானவொளி வீசும் அடியவனாகத் தன்னை மாற்றிய சிவனருளை எண்ணி, மாணிக்கவாசகர் வியப்படைகின்றார். இறைவழிபாட்டில் இறையருளோடு கலந்து இன்புறுகின்றார்.
“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ” (குழைத்தபத்து, 6)
என இறையருளோடு கலந்து இன்புறும் ஆன்மாவிற்குத் திருவடிப்பேறு உறுதியாகக் கிடைக்கும் என்கின்றார் மாணிக்கவாசகர்.
4. இறையன்பில் உறுதி
தான் சார்ந்ததன் வண்ணமாகவும் எண்ணமாகவும் விளங்கும் ஆன்மாவானது இறைச்சார்பினால் பேரின்பத்தை அடைகின்றது. அது, இறையன்பில் உறுதியாக நிற்கும்போது மேலும் மேலும் பேரின்பத்தையே பெறுகின்றது.
இறைவழிபாட்டில் இத்தகைய உறுதிப்பாட்டுடன் நின்ற மாணிக்கவாசகருக்கு, மேலும் மேலும் துன்பங்களே வந்தன. அவர் அத்துன்பங்களைப் பொருட்படுத்தாமல் நின்றமையால் அவரைப் பார்த்து ஊரார் எள்ளி நகையாடினர்.
“இவ்வாறு ‘பித்தன்’, ‘பேயன்’ என்று ஊரார் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் மாணிக்கவாசகர் இறையன்பில் உறுதியாக நின்று இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டார்.

முடிவுரை

இறைவழிபாடு ஒன்றே ஆன்மாவை உயர்நெறியிலும் நன்னெறியிலும் செயற்படுத்திப் பயிற்றுவித்து உய்விக்கின்றது. மன ஒருமைப்பாட்டுடன், வழிபாடு செய்யும் போது உள்ளமும் உடலும் தூய்மையடைகின்றது. இறைவழிபாட்டினால் ஐம்பொறிகளும் அதனதன் படைப்பின் பயனைப் பெறுகின்றன. பரம்பொருளாகிய சிவனைத் தம்முள் பதித்த மாணிக்கவாசகர், பேரின்பத்தில் திளைத்தல், அகங்குழைந்து வழிபடுதல், இறையருளோடு கலத்தல், இறையன்பில் உறுதி முதலான இறைவழிபாட்டு முறைகளால் மனம் ஒன்றிய ஒருமைப்பாட்டு நிலையில் பேரானந்தம் துய்த்தவராக விளங்கியமையை இக்கட்டுரையின் வாயிலாக உணரலாம்.
_____

புதுக்கவிதையில் பக்திக்கொள்கை

செ. ரவிசங்கர், எம்.ஏ., எம்.ஃபில்.,

தமிழ்மொழியைப் ‘பக்தியின் மொழி’ என்று அறிஞர் கூறுவர். இந்த அளவிற்குச் சிறப்புப் பெற்று விளங்குவதற்குக் காரணம் வேறு மொழிகளில் இல்லாத அளவிற்குத் தமிழ்மொழியில் பக்திப் பாடல்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய காலப்பகுப்பில் ‘பக்தி இயக்க காலம்’ என்று கூறும் மரபும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் தோன்றியுள்ள எல்லா வகை இலக்கியங்களிலும், கடவுளைப் பற்றிய கருத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ‘புதுக்கவிதைகளில் கடவுட் கொள்கை’ பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
மனிதனும் இறைவனும்
கடவுள் தொடர்பை உணர்தல், உணராமை என்னும் இரண்டும் மனிதனது செயல் நிலையைப் பொறுத்திருக்கின்றன. மனிதன் முயன்று முயன்று உழைப்பானேன். அவன் தன்னை இட்டுப்பிரியாத சத்தியின் தொடர்பை உணர்தல் கூடும். (திரு.வி.க. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், ப.462) அந்த அளவில் மனிதன் பொருட்டு அமைக்கப்பட்ட சமயநெறியில் நின்றொழுக வேண்டுவது மனிதனின் கடமையாகும். இக்கருத்துக்கள் மனிதனின் தத்துவத் தொடர்பான இறைத்தன்மையை விளக்குகிறது. தத்துவத்தை விடுத்துப் பக்தியை இலக்கியத்தில் காண முடியாது. அந்த அளவிலேயே புதுக்கவிதையிலும் தத்துவத்துடன் கூடிய பக்தி அமைந்துள்ளது.
“இந்துவே திரண்டு வா!
என்றோ
கிருஷ்துவனே கிளம்பி வா!
என்றோ
இஸ்லாமியனே எழுந்து வா!
என்றோ
எழுப்பாதீர் முழக்கம்
மனிதனே இணைந்து வா!
என்று முழங்கி
மானுடத்தை இனியேனும்
மதத்துவப் படுத்துங்கள்!” (மு. மேத்தா, கனவுக்குதிரை, ப. 16)
கவிஞர், ‘மனிதனில் வேறுபாடு காட்டாதே’, மனிதனில் தெய்வத்தைக் காண முற்பட்டு மனித சமுதாயத்தை ஒன்றிணைப்போம்; அப்போது மானுடம் மகத்துவம் அடையும்!’ என்கின்றனர். இந்தக் கருத்தைச் சித்தர் பாடல்களில் காணலாம். “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா”. இக்கருத்தையே கவிஞர் முன்னிறுத்தி மனிதர்களை சமயத்தின் பெயரிட்டு அழைக்காதீர் என்கிறார். “வாழ்க்கையில் அனுபவ ரீதியாக அனுபவித்த மெய்ப்பொருள் தத்துவமாகும்” (சோ. ந. கந்தசாமி, தமிழும் தத்துவமும், ப. 1). கவிஞரும் தமது அனுபவ மெய்ப்பொருளைக் காட்டுகிறார்.
பக்தியின் தேவை
காலமாற்றம் அனைத்துக் கூறுகளையும் மாற்றம் அடையச் செய்கின்றது. சமூகம், பண்பாடு, நாகரிகம், மனிதன் உடுத்தும் உடை, உண்ணும் உணவு போன்ற அனைத்தும் மாற்றம் அடைகின்றன. இதில் பக்தியும் அதாவது சமயச் சிந்தனைகளும் மாற்றம் பெற்றுள்ளன. “மக்களை மக்களாக வாழச் செய்ய வழி கோலுவது சமயம். நேர்மை, ஒழுங்கு, நீதி தவறாமை போன்ற நற்பண்புகளை மக்களிடையே விதைப்பது சமயம்”. (சு. பழனியம்மாள், அப்துல்ரகுமான் படைப்புகளில் சமுதாயப் பார்வை, ப. 118).
“பக்தியைக் காட்டினால்
பரமன் மகிழ்வான்
நீங்களோ உங்கள்
சக்தியைக் காட்டுகிறீர்கள்
ஆண்டவன்
சங்கடப்படுகிறான்” (மு. மேத்தா, கனவுக்குதிரை, ப. 16)
இவ்வாறாகக் கவிஞர் பக்தினை கூற முற்பட்டாலும் இன்றைய மக்களின் செய்கையால் மனம் நொந்து சங்கடப்படுகிறார்.
இன்றைய பக்தி நிலை
கடவுள் என்பது மனிதன் நம்புகின்ற ஒரு நம்பிக்கையாகும். அதாவது நல்ல வழியில் தீய எண்ணங்களை விடுத்துச்செல்ல இறைவனின் துணை தேவைப்படுகின்றது என்ற நோக்கத்தில் தான் பல அறிஞர்கள் இறைவனின் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!”
என்று திருஞானசம்பந்தர் இந்த உலகில் நல்லபடி வாழமுடியும் என்ற ஆர்வத்தை ஊட்டும் விதமாக இப்பாடலைப் பாடியுள்ளார்.
இந்த நிலை அக்கால சமுதாயம் இருந்த சூழலைக் காட்டுகிறது. ஆனால் இன்று கடவுளின் பெயரால் பணத்தையும் புகழையும் சிலர் தேடிக்கொள் கின்றனர் என்பதைத் தமிழன்பன்.
“குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
கோயிலில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியிருக்கப் போனார்கள்” (சென்னிமலை கிளியோ பத்ராக்கள், ப.30)
குருக்கள் இல்லாத ஊர்களுக்குத் தெய்வங்கள் இடம்பெயர விரும்புவதாகக் கூறுகிறார். இது இன்றைய நிலையின் பக்தி வெளிப்பாட்டின் தவறான போக்கினைக் காட்டுகிறது. “இலக்கியம் என்பது சமுதாய நிலைமை -களினின்றும் உற்றெடுப்பது. அந்த வகையிலே அதுவும் வாழ்க்கையிலே ஓர் அம்சமாக அதன் ஓர் அங்கமாக இருக்கிறது. வாழ்க்கையை இயக்கும் மிகப் பிரதானமான சக்தியாக அது இல்லையாயினும் அதுவும் கணிசமான தாக்கத்தை உடைய ஒரு துணை வலுவாக உள்ளது. (முருகையன் இன்றைய உலகில் இலக்கியம், ப. 33) இந்த விதத்தில் தான் புதுக்கவிதையும் பக்தியின் கூறுகளைப் பதிவு செய்கிறது.
மனித எண்ண வெளிப்பாடு
இன்றைய மனிதனின் செயல்கள் தீய எண்ணங்கள், சமுதாய ஒழுக்கக் கேடுகள் போன்ற செய்திகளை எல்லாம் நன்கு அறிந்த கவிஞர்,
“இல்லையென்று தான்
தோன்றுகிறது
இருந்தாலும் ஒரு கேள்வி
கேட்டு வைப்போம்
கடவுளிடம் நீ
இருப்பதால் என்ன பயன்” (தமிழன்பன் கனாக்காணும் வினாக்கள், ப.80)
என்று கேள்விகளைக் கடவுளின் மீதே எழுப்புகிறார். “பொதுவாக இக்காலக் கவிதைகளின் தலைமைப் போக்கினை மூன்றாகப் பிரிக்கலாம்; நடைமுறைச் சமுதாயச் சிக்கல்களைத் தொடுவதற்கே அஞ்சுதல், சமுதாயச் சிக்கல்களை அணுகி ஆராய்தல்; சமுதாயச் சிக்கல்களை அணுகி ஆராய்வதோடு மட்டுமன்றிப் புரட்சிமிக்க மாற்றம் சொல்லுதல் என்பன”. (து. மூர்த்தி, இக்கால கவிதைகள் மரபும் புதுமையும், ப. 1) இந்தக் கருத்தினில் புதுக்கவிதை படைக்கும் கவிஞர்கள் மூன்றாவது கருத்தினையே தமது குறிக்கோளாகக் கொண்டு கவிதைகளைப் படைத்து வருகின்றனர்.
“உலகில் ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் சமுதாயத்திற்கு ஒன்றை வலியுறுத்துவான். எழுதுகிறவர்கள் இந்தச் சமுதாயத்திற்குச் சொல்லுவதற்கு எதுவும் இல்லையென்றால் பிறகு அவர்கள் இந்தச் சமுதாயத்திடம் எதையும் எதிர்பார்ப்பதற்கும் உரிமை இல்லை” (செயப்பிரகாசம் - நாளை விடியலில் ரத்த புஷ்பங்கள், ப. 4) இதனை உண்மைப்படுத்தும் நோக்கமாகவே சமுதாயத்திற்கு ஏதேனும் கருத்தினை கவிஞர்கள் முன் வைத்துக் கொண்டுள்ளார்கள். சமுதாயத்தில் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்வுகளை பதிந்து வருகின்றனர். இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் மனிதனாக இருந்தாலும் கவிஞர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
“கடவுளுக்கு
முடி நரைத்த பிறகாவது
தெரியுமா
மனிதனைப்
படைத்ததில் உள்ள
தவறு” (தமிழன்பன், கனாக்காணும் வினாக்கள், ப. 73)
சமுதாயக் கொடுமைகளையும், தீய செயல்களையும் கண்ட கவிஞர்கள் கடவுளைப் பார்த்துக் கேட்கிறார்கள். பொதுவாக எழுத்தாளன் வாழ்பவதும், உணர்வதும் பார்ப்பதும், எல்லாமே சமுதாயத்திலிருந்துதான், ஆகையால் அவனுடைய படைப்புகளும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டே திகழமுடியும் என்பது உண்மையாகும் படியாக புதுக்கவிஞர்கள் கடவுளைப் பற்றிய தமது படைப்புகளில் எழுதிக்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இலக்கியங்கள் பல கோணங்களில் இன்று உருவாகிப் பல பரிமாணங்களை அடைந்து வருகிறது. பல மேலைநாட்டுக் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு இன்றைய தமிழிலக்கியம் புதுவிதமான போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் புதுக்கவிதையும்; அவற்றைப் பற்றிய விமர்சனமும், திறனாய்வும், அவ்வாறே வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையிலும் பக்திக் கொள்கைகளையும்; பக்திக் கருத்துக்களையும் கவிஞர்கள் புதுக்கவிதையில் படைத்து வருவதன் மூலம் நமது பண்பாட்டில் கடவுள் பெறுகின்ற இடத்தைக் காணமுடிகிறது. கடவுளின் கருத்துக்களைத் தவிர்க்க முடியாது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இறைவனை எதிர்த்தும் விமர்சித்தும் பல கவிஞர்கள் கவிதை இயற்றினாலும்,
“இறைவனின் சோதனை பலகோடி அதில்
இதயங்கள் வாழுது போராடி பலர்
நாடுகின்றார் அவன் அருள்தேடி இங்கே
நாளும் நடப்பதெல்லாம் அவன் ஆணைப்படி”
(வ. சிங்காரவேலு, புதுயுகம் மலரட்டும், ப.44)
என்று இறைவனின் மீது நம்பிக்கையும் புதுக்கவிஞர்கள் வைத்துள்ளார்கள். எனவே இறைவனைச் சமுதாயம் மறக்க வாய்ப்பில்லை எனக் கூறலாம்.
__________

ஒரு வரலாற்றின் வரலாறு

டாக்டர் இரா. கலைக்கோவன்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் இராசமாணிக்கனார். தமிழுடன் மிகுதியான தொடர்போ, தமிழில் தனித்த ஈடுபாடோ இல்லாத ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தெலுங்கு மொழியே பயின்று வளர்ந்தவரான அவர், பின்னாளில் தமிழ் வளர்த்த செம்மலாக மலர்ந்தமை வியப்பும் சுவையும் நிரம்பிய வரலாறாகும்.
1907ம் ஆண்டு மார்ச் 12ம் நாள் பிறந்த இராசமாணிக்கனார், தம்முடைய ஒன்பதாவது வயதிலிருந்துதான் தமிழ் பயிலத்தொடங்கினார். தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியில் ஆறாம் வகுப்புச் சேர்ந்த இவர், தொடர்ந்து பள்ளியிறுதி வகுப்புவரை அங்கேயே பயின்றார். கரந்தை ரா. வேங்கடாசலம் இவர் மீது அன்பு பாராட்டித் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். 1927 மார்ச்சில் பள்ளியிறுதித் தேர்வு முடித்தவர், 1928-ல் சென்னை தியாகராயர் நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார். இவர் எழுதிய முதல் நூல் 1930-ல் வெளிவந்தது. அப்போது இராசமாணிக்கனாருக்கு வயது 23.
எட்டு ஆண்டுகள் தியாகராயர் நிடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936-ல் சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார். அங்கு பள்ளிக்குரிய பாடநூல்களை எழுதி வெளியிட்டதோடு, பி. ஓ. எல் (1939), எல்.டி., (1944), எம்.ஓ. எல். (1945) என்னும் பட்டங்களும் பெற்றார்.
அவருடைய சிறப்புக்குரிய பல நூல்கள் இக்காலத்தே வெளிவந்தன. அவை, ‘மொஹெஞ்சோதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ (1941), ‘பல்லவர் வரலாறு’ (1944) ‘சேக்கிழார் ஆராய்ச்சி நூல்’ (1945) ‘சோழர் வரலாறு’ (1947) என்பனவாம். தியாராயர் பள்ளியிலும் முத்தியாலுப்பேட்டைப் பள்ளியிலும் பணியாற்றிய காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டு, சீர்திருத்தப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
தமிழர் திருமணத்தில் சடங்குகள் பெருகிச் செலவுகளும் மிகுந்த நிலையில் பல குடும்பங்கள் கடன் சுமையால் துன்பப் பட்டமையைக் கண்ணுற்ற இராசமாணிக்கனார் மனம் வருந்தினார். அச்சமயத்தில் ‘தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’ என்ற அமைப்பு இராசமாணிக்கனாரிடம், ‘தமிழர் திருமண நூல்’ ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டியது. பழந்தமிழர்தம் எளிய திருமண முறைகளை உரிய சான்றுகளோடு எடுத்துக் காட்டி 1939-ல் அந்நூலை வெளியிட்டார். பலரின் பாராட்டுதலுக்கு உரியதாயிற்று அந்நூல்.
1947 - 1953 வரை விவேகானந்தர் கல்லூரியில் பணியாற்றிவர், ‘சைவ சமய வளர்ச்சி’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகால சென்னை வாழ்க்கையில் (1928 - 1952) இராசமாணிக்கனார் ஆற்றிய பணிகளும் அடைந்த வெற்றிகளும் பெருமைக்குரியவை.
நீண்ட காலம் சென்னையில் வாழ்ந்த இராசமாணிக்கனார் 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரானார். மதுரையில் இருந்தபோது எழுத்தாளர் மன்றம் உருவாகத் துணைநின்றதுடன், நாற்பது நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றுள் குறிப்பிட்டத்தக்கவை ‘தமிழ் மொழி இலக்கிய வரலாறு’, ‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்னும் நூல்கள். தமிழ்நாடெங்கும் பயணித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இலக்கிய நுகர்வையும் சமய, சமூக சீர்திருத்த மனப்பாங்கையும் மக்களுக்கு ஊட்டுவனவாக அமைந்தன.
இவரது பணிகளைப் பாhராட்டிக் கோயமுத்தூர் திருவள்ளுவர் கழகம் 1956 ஆகஸ்டு 26-ல் பெருமைக்குரிய பாராட்டு விழாவொன்றை அமைத்தது. 1959 செப்டம்பரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற இவ்வறிஞர் 1967 முடிய அப்பணியில் இருந்தார். பணியிலிருந்த முதல் ஐந்தாண்டுகளில் சங்கத் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டை ஆய்வு செய்து, ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்ற பெயரில் நூலாக்கி, பல்கலைக்கழகத்திடம் ஒப்புவித்தார். அவ்வரிய ஆராய்ச்சி நூல் பின்னால் (1970) பல்கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
சமயத்துறையில் இவர் ஆற்றிய பணிகளில் மனம் நிறைந்த சைவத் திருமடங்கள், சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் (1951), ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ (1955), ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ (1963), ‘சைவ நெறிக் காவலர்’ (1959) என்னும் பட்டங்களை வழங்கி மகிழ்ந்தன.
பல்கலைக்கழகங்களில் தலைமைத் தேர்வாளராகவும் பாடத்திட்டக் குழுத் தலைவராகவும் விளங்கிய இவ்வறிஞர் மாணவர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ‘தமிழ்ப் பாடத்தில் மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்குரிய மதிப்பெண்களைத் தருவதில் தயக்கம் கூடாது. இந்த அளவிற்குமேல் உயர்ந்த மதிப்பெண் மொழிப்பாடத்தில் கூடாது எனும் போக்குத் தவறானது. மாணவர்கள் சிறப்பாக விடையெழுதியிருந்தால் உரிய உயரிய மதிப்பெண்களை வழங்கிடல் வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் பாடத்தைத் தயங்காது தேர்ந்து கொள்ள மாணவர்க்கு ஊக்கம் பிறக்கும்’ என்பது இராசமாணிக்கனாரின் கருத்தாக இருந்தது.
தாம் உழைத்து உயர்ந்ததோடு நிறைவடையாத இராசமாணிக்கனார் தம் துணைவியர் கண்ணம்மாளையும் வித்துவான் பட்டம் பெறச் செய்தார். அவ்வம்மை மதுரையில், பாத்திமா கல்லூரியில் பணியாற்றினார். இத்துணை சிறப்புகளை ஈட்டிப் புகழ் படைத்திருந்த இராசமாணிக்கனார் 26-5-1967 வெள்ளிக்கிழமை அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

(நன்றி : தினமணி 11-3-2006)
_________

திருமந்திரப் பாடல்களில் திருக்குறள் தாக்கம்

துரை. மணிகண்டன்

சமயத்துறையில் தமிழ் மொழியிலே தோத்திர சாத்திர நூல்களுக்கு மூலமாக இருப்பது திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் பத்தாம் திருமுறையாக விளங்குகின்றது. தமிழகத்துச் சித்த பரம்பரைக்கு மூலமாகவும், மிகச் சிறந்த யோகியாகவும் ஞானியாகவும் விளங்கியவர் திருமூலர் ஆவார். இத்திருமந்திர நூலைப் ‘பொருள் நூல்’ என்றும் இயம்புவர். இதன் பெருமை அளவிடற்கரியது. இந்நூலின் கருத்துக்கள், உலக மொழிகளில் சிறந்து விளங்கும் திருக்குறள் கருத்துக்களைச் சார்ந்து அமைத்திருப்பதைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருமந்திரப் பாடல்கள் ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருமூலரால் இயற்றப்பட்ட இப்பாடல்களே திருமந்திரம் என வழங்கலாயிற்று. இதனைத் ‘திருமந்திரமாலை’ என்றும் ‘தமிழ் மூவாயிரம்’ என்றும் அழைப்பார்கள்.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” - தொல், செய்யுளியல் - 176.
எனும் தொல்காப்பிய நூற்பாவிற்கு இயைய, நிறைமொழி மாந்தராகிய திருமூலரால் இயற்றப் பெற்றமையின் ‘திரு’ எனும் சிறப்பைப் பெற்றுத் ‘திருமந்திரம்’ எனப் பெயர் பெற்றுள்ளது.
நூற் பாகுபாடு
திருமந்திரம் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. பாயிரத்தைச் சேர்த்துப் பத்துப் பகுதியாக உள்ளன. தந்திரங்கள் அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. முதல் தந்திரம் 24, இரண்டாம் தந்திரத்தில் 25, மூன்றாவதில் 21, நான்காவதில் 13, ஐந்தாவதில் 20, ஆறாவதில் 14, ஏழாவதில் 38, எட்டாவதில் 45, ஒன்பதாவதில் 27, ஆக மொத்தம் 227 அதிகாரங்கள் உள்ளன.
திருக்குறள் முப்பாலாகப் பகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாலும் இயல்களாகவும், இயல் அதிகாரங்களாகவும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. அறத்துப் பாலில் பாயிரவியல் 4 அதிகாரங்கள், இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1 என நான்கு இயல், 38 அதிகாரங்களை உடையது. பொருட்பாலில் அரசியல் 25, அமைச்சியல் 10, அரண் இரண்டு, கூழ் ஒன்று, படை இரண்டு, நட்பு 17, குடி 13 என ஏழியல்; 70 அதிகாரங்களை உடையது. மூன்றாம் பகுதியான காமத்துப்பாலில் களவியல் 7, கற்பியல் 18, இரண்டியலும் 25 அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
திருக்குறளிலுள்ள அதிகாரத் தலைப்புக்களில் சில, திருமந்திரத்தில் வேறுபாடின்றிக் காணப்படுகின்றன. திருக்குறளில் முதலதிகாரமாக உள்ள கடவுள் வாழ்த்து, திருமந்திரந்திலும் பாயிரத்தில் முதலதிகாரமாய் உள்ளது. அது போலவே முதல் தந்திரத்தில் சிறிதும் மாற்றமின்றிக் கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன்மனை நயவாமை, நல்குரவு, அன்புடைமை, கல்வி, கல்லாமை, நடுவு நிலைமை, கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத் தலைப்புகள் உள்ளன.
இரண்டாம் தந்திரத்தில் பொறைமையுடைமை, பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரங்கள் குறளிலுள்ள அதிகாரங்களின் தலைப்புகளைக் கொண்டுள்ளன.
திருக்குறளில் அறத்துப்பாலில் வரும் நிலையாமை என்னும் அதிகாரம் திருமந்திரம். முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, உயிர் நிலையாமை, இளமை நிலையாமை என நிலைகளில் அமைந்துள்ளது. இவ்வாறாகத் திருமந்திர - தந்திரங்களின் தலைப்புக்கள், திருக்குறளின் உட்பிரிவுகளை ஒத்துள்ளன.
கடவுள் வாழ்த்து
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள முதற்குறளின் சொல்லும் பொருளும் திருமந்திரத்தில் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளன.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” - குறள் 1
இக்குறளில் வரும், ஆதிபகவன், எனும் சொல், திருமந்திரத்தில் ‘ஆதி’ என்றும், ‘பகவன்’ என்றும் தனித்தனியாகவும், ‘ஆதி பகவான், ஆதிப்பிரான், வேதப் பகவனார்’ எனச் சிறு மாற்றங்களோடும் காணப்படுகின்றன.
“ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் . . .” (திரு 319)
“அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடையார் நெஞ்சத் தங்கு நின்றானே” (திரு 2364)
எனும் பாடல் வரிகளால் ‘ஆதிப்பிரான்’ என்னும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
“ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான்” (திரு 415)
என்னும் திருமந்திரப் பாடலில் “ஆதி” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. பகவன் எனும் சொல் திருமந்திரத்தில் இரண்டிடங்களில் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“படமாடக்கோயிற் பகவற் கொள் நீயில் . . .” (திரு 1857)
“பகவற்கே தாகிலும் பண்பில ராகில் . . .” (திரு 1865)
பகவன்முன் ஆதி சேர்ந்து ‘ஆதி பகவன்’ எனக் குறளில் வருவது போலப் பகவன் முன் வேதம் சேர்த்து ‘வேதபகவன்’ என்னும் சொல் ‘வேதப் பகவனார்’ என வந்துள்ளது. இவை திருக்குறளின் தாக்கமாகவே உள்ளது. மேலும் அறத்தை வலியுறுத்தும் கருத்துக்கள், ஒற்றுமையுடன் இருப்பனவும் காண முடிகிறது.
அறன் வலியுறுத்தல்
“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு” (குறள் 31)
எனும் குறள், அறம் சிறப்பினையும், செல்வத்தையும் கொடுக்க வல்லது என்கிறது. எனவே மக்களுக்கு அதனைவிட ஆக்கந்தருவது பிறிதொன்றும் இல்லை எனக்கூறுகின்றது.
சிறப்பு - வீடுபேறு என்பர் பரிமேலழகர். இத்திருக்குறட் கருத்தினைத் தழுவித் திருமந்திரம்,
“திறந்தகு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடல் வேந்தனுக்கு அறிபிலன் நாமே” (திரு. 244)
என இயம்புகின்றது.
குறளில் உள்ள ‘சிறப்பு’ எனும் சொல்லுக்குத் திருமூலர் ‘முத்தி’ அல்லது ‘வீடுபேறு’ என்று பொருள் எழுதியுள்ளார். தம்மால் இயன்ற அறவினையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதை,
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்” (குறள் 33)
எனக் குறள் கூறுகின்றது. இக்கருத்து திருமந்திரப் பாடலிலும் அமைந்துள்ளது.
“யாவர்க்கும் மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” (திரு 252)
இறைவனைப் பச்சிலையிட்டு வழிபடுதலும் பசுவுக்கு ஒரு வாயளவும் அருகம்புல் தருதலும், வறுமை உடையவர்க்கு ஒரு கைப்பிடி சோறிடுதலும் எல்லோரிடமும் இனிய சொற்களைக் கூறுதலும் ஒவ்வொருவராலும் செய்ய முடிகின்ற அறச் செயல் ஆகும். அவற்றைச் செய்யுங்கள் எனத் திருமந்திரப்பாடல் இயம்புகின்றது. அறச்செயல் என்பது “குறளில்” ‘இனியவை கூறல்’ அதிகாரத்தில் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு வேண்டிய பொருளினைக் கொடுத்தலினும் அவனைக் கண்டபொழுது முகம் இனியனாய் இனிய சொல்லையும், கூறுவானாயின் நன்று என வந்துள்ளது.
“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொலி லினிதே அறம்” (குறள் 93)
குறள் கருத்தை ‘மந்திரம்’ தாங்கி எடுத்தியம்பியுள்ளது. இனிய சொல் அறம் என்பன போன்று மனிதன் நடுவு நிலைமையொடு இருக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.
நடுவு நிலைமை
மனிதனின் உயரிய வாழ்விற்கும், புகழுக்கும் முக்கியமானவை நடுவு நிலைமையாகும். மனம் மாறுபட்டு நீதி பிறழ்ந்து தீங்கு செய்ய நேருமாயின், அதுவே தன் அழிவுக் காலத்திற்கு அறிகுறி என்பதை அறிவானாக என்பது நடுநிலைமைக் குறள்
“கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (குறள் 116)
என்பதை நடுவு நிலைமைக் குறளில் காணலாம். திருமந்திரம் ‘நடுவு’ என்பதை நடுவு நிலைமை எனும் பொருளில்
“கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்தின்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவதும் செய்யிற் பசுவது வாமே” (திரு 268)
எனப் பயன்படுத்தியுள்ளார். ‘நடுவு’ எனும் சொல்லைத் திருமந்திரத்தில் ‘யோகநெறி’ என்றும் பயன்படுத்தியுள்ளார்.
புலால் மறுத்தல்
ஊன் உண்ணாமையை உடைய உடம்பை ‘உயிர் நின்ற உடம்பு’ என்றும், ஊன் உண்டவனை நரகம் கூட ஏற்றுக் கொள்ள வாய்திறக்காது என்றும் கூறுவர் வள்ளுவர்.
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணவார்ப் பெறின்” (குறள் 257)
“உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ணல்
அண்ணாத்தல் செய்யா தளறு” (குறள் 225)
என்ற குறள்கள், ஊன் உண்ணாமையை அறிவுறுத்துகின்றன. இக்கருத்தைத் திருமந்திரமும் புலால் உண்ணுபவரை எல்லாரும் காண எமன் தூதர் பற்றிச் சென்று நரகத்தில் தள்ளப் பின் அதிலிருந்து தப்பிச் செல்லாமல் தவிப்பர் என்றும் கூறுகின்றது,
“பொல்லாப் புலாலை நுகரும் . . . . . .
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே” (திரு 199)
இங்கு திருக்குறள் கருத்துக்கு ஏற்ப திருமந்திரம் புலாலுண்பார் நரகம் புகுவர் எனும் கருத்தில் ஒத்திருத்தலையும் காண முடிகின்றது.
துறவு
துறவு எனும் அதிகாரத்தில் பேசப்படும் திருக்குறள் கருத்துக்களின் சாயல்கள் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
“பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” (குறள் 350)
என்ற இக்குறளின் கருத்தினைப்
“பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின் . . . .” (திரு 298)
எனத் தொடங்கும் திருமந்திரப் பாடல் எடுத்துரைக்கிறது.
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (குறள் 377)
கோடி கோடியாகப் பொருளை ஈட்டி வைத்தவர்களும் ஊழ் விதித்த அளவிற்கு மேல் நுகர முடியாது என்பது இக்குறளின் பொருள். இச்செய்தியானது அனைவர்க்கும் பொதுவாகக் கூறப்பட்டதாகும். மேலும் ஊழின் பேராற்றலை
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்” (குறள் 380)
என்று குறள் கூறும். இக்கருத்தைத் தாங்கியே திருமந்திரமும் ஒரே பாடலில் நான்கு இடங்களில் ‘பெருவலி’ எனும் சொல்லை அதே பொருளில் எடுத்தாண்டுள்ளது:-
“விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நீதியின் பெருவலி நீர்வலி தானே” (திரு 2030)
எனும் பாடலில் திருக்குறள் கருத்து மிளிர்வதைக் காணலாம். ஊழை வெல்ல நல்ல மனத்துணிவும், நல்ல பண்புகளும் பெற்றிருக்க வேண்டும்.
பண்புடைமை
பாத்திரத்தின் தீமையால் அதனுள் இருந்த பால் கெட்டுப் போகும். அதுபோல் பண்பில்லானிடம் இருந்த செல்வமும் நல்ல செயலுக்குப் பயன்படாது, கெட்டு ஒழியும் என்பதனை,
“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று” (குறள் 1000)
என்று குறள் புலப்படுத்துகின்றது. திருமந்திரம் இக்குறளினைத் தழுவி “நீதியிலோர் பெற்ற பொன்” எனும் பாடல் அடியில் உவமையாக எடுத்தாண்டுள்ளது.
“நீதியிலோர் பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாருந் தொடர்ந்தறி வாரில்லை!” (திரு 2096)
முடிவுரை
திருமந்திரப் பாடல்களில் திருக்குறள் கருத்துக்கள் பொதிந்துள்ளன; திருக்குறள் கருத்துக்களைத் திருமந்திரத்தில் திருமூலர் வலியுறுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.
____________

செய்திக்குள் செய்தி

ரூ 100 கோடி செலவில்
அமெரிக்காவில் சிவன்கோயில்

‘ஹிந்து டெம்பில் ஆஃப் ஜார்ஜியா’ என்ற அறக்கட்டளை மூலம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நார்கிராஸ் புரூக் ஹாலோ பார்க்வே என்ற இடத்தில் ரூ. 100 கோடி செலவில் சிவன் கோயில் கட்டப்படுகிறது.
இதைக் கலிபோர்னியாவில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த சோதிடர் ஸ்ரீ ஸ்ரீ சங்கர் சித்தர் தனது சொந்தச் செலவில் கட்டுகிறார்.
கோயில் அமைய உள்ள ஜார்ஜியா மாகாணம் மிகப் பெரிய வணிகப் பகுதி. இப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கோயில் அமையவுள்ள இந்திய மதிப்பில் ரூ.37 கோடிக்கு வாங்கப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக 108 உற்சவ மூர்த்தி சிலைகளுடன் பிரதிஷ்டை செய்யப்படும் சிவன் கோயில் இதுதான்.
கோயிலுக்குத் தேவையான 108 ஐம்பொன் சிலைகளைக் கும்பகோணம் அருகே சுவாமிமலையிலுள்ள ஜானகி ஆர்ட் அண்டு கிராப்டின் தலைமை ஸ்தபதி எம். ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். இதே போல், கற்களால் ஆன மூல விக்ரகங்களை, கோவை மாவட்டம் அவிநாசி திருமுருகன் பூண்டியில் உள்ள நவபாரதி சிற்பக் கலைக் கூடத்தின் தலைமை ஸ்தபதி சம்பந்தம் வடிவமைத்தார்.
கோயிலைச் சுற்றி 4 ஆயிரம் அடியில் வேலி அமைக்கப்படும். இதற்கான பணியில் கிரில் உற்பத்தி சங்கத் தலைவரான கோவிந்தராசன் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 1,600 அடிக்கான வேலி தயாரிக்கப்பட்டுள்ளது.

அய்யம்பொழில் ஈசுவரமுடைய நாயனார் கோயில் :
ரூ 50 லட்சம் செலவில் திருப்பணி செய்ய முடிவு

தொன்மையான சிவத் தலங்களில் ஒன்றான அய்யம்பொழில் ஈசுவரமுடைய நாயனார் திருக்கோயிலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தால் விரைவில் திருப்பணி மேற்கொள்ளப் படவிருக்கிறது.
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை - திருவாதவூர் சாலையில் ஆமூர் கிராமத்தில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் முள்புதர்கள் நிறைந்திருந்த இக்கோயில்கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. கருவறையின் மேல்புறம் உள்ள விமானப் பகுதி முற்றிலும் சிதைந்துள்ளது. கருவறையிலிருந்து அபிஷேக நீர் வெளியேறும் பகுதி வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பாண்டியர் காலத்தில் செதுக்கிய பைரவர் சிற்பமும், தேவியின் சிற்பமும் சிதிலமடைந்துள்ளன. அழகிய நந்தி மகாமண்டபத்தின் வெளிப்புறம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இக்கோயில் மதில் சூழ்ந்த பெருங்கோயிலாக இருந்தமைக்குச் சான்றாக இதனைச் சுற்றி ஏராளமான கற்கள் சிதைந்து கிடக்கின்றன. கோயில் அருகே தாமரைப் பூக்கள் நிறைந்த குளமும் உள்ளது. வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளதாகப் பலர் அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குலசேகர பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஆதரவுடன் வணிகக் குழுவினரால் இக்கோயில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
பல்லவ சிற்றரசர்களில் சிலர் அரசுரிமை இழந்த பின் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் ‘காடுவெட்டி’ என அழைக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒருவரால் இக்கோயில் நிலைவாயில் உருவாக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் விரைவில் திருப்பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது.

1,800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட
முருகன் கோயில் கண்டுபிடிப்பு

மாமல்லபுரம் அருகே இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு (சங்க காலத்தில்) கட்டப்பட்ட பிரம்மாண்டமான முருகன் கோயில் கண்டறியப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த சாலுவங் குப்பத்தில் புலிக்குகை அருகே கடற்கரையை ஒட்டிய பாறையில் தமிழ்க் கல்வெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதில் ஒரு கல்வெட்டு, சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருவிளக்கு எரிய தங்கத்தைத் தானமாக வழங்கி ராஷ்டிரகூட மன்னன் 3-ம் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதர கல்வெட்டுகள் குலோத்துங்க சோழன், பராந்தகச் சோழன் காலத்தைச் சேர்ந்தவை. இக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், இப் பகுதியில் முருகன் கோயில் இருந்திருக்கக் கூடும் என்பது தெரியவந்தது.
இதில் கல்வெட்டுகள் உள்ள பாறையை ஒட்டி செங்கற்களால் ஆன கருவறை கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. செம்பாறைக் கற்களால் 4 அடுக்கு அஸ்திவாரம் அமைத்து அகலமான பெரிய செங்கற்களால் மண் வைத்து இக் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக செங்கற்களால் அமைக்கப்பட்ட கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது இது மட்டுமே ஆகும்.
மரம், சுண்ணாம்பு, உலோகம், கற்களை விட செங்கற்களால் கருவறை கட்டப்படுவது மிகவும் புனிதமானது என்ற கருத்து பழங்காலத்தில் இருந்தது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இதைத் தொடர்ந்து ஒரு தூணிலும் கல்வெட்டு உள்ளது கண்டறியப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குத் தானம் அளித்த விவரங்களை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ‘திருசூலம்’ பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளில் சாலுவங்குப்பம் கிராமம் ‘திருவிழிச்சல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர் கால வரலாற்றில், ஆமூர் கோட்டத்துக்கு உட்பட்டதாக இக்கிராமம் இருந்துள்ளது. தொடர்ந்து பல்லவ மன்னர்களான நந்திவர்மன், தந்திவர்மன் ஆகியோரது கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
கோயிலின் பிரதான வாயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த வாயிலுக்கு முன்புள்ள மண்டபத்தில் பல்லவ மன்னன் கம்பவர்மன் காலத்து (கி.பி. 870-ம் ஆண்டு) புதிய கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டது. இதன்பின் தொடர்ந்த அகழாய்வில் இராச ராச சோழன் காலத்து செப்புநாணயம் கிடைத்தது. கோயிலுக்கு உள்ளே வேல் கோட்டம் அமைந்துள்ளது. இதில் கல்லால் செதுக்கப்பட்ட பிரமாண்ட வேல் நிறுவப்பட்டுள்ளது.

பழ - நெடுமாறன் நூல்கள் வெளியீடு

மாவீரன் திரு பழ. நெடுமாறன், சிறையிலிருந்த போது எழுதிய, ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும், பழந்தமிழ் பரவிய நாடுகள்’ முதலான 6 நூல்கள், பூங்குழலி எழுதிய ‘தொடரும் தவிப்பு’ நூல் என 7 நூல்களின் வெளியீட்டு விழா, மதுரையில் 1-4-05இல் நிகழ்ந்தது. நூல்களைக் குளத்தூர் மணி முதலானோர் வெளியிட்டு, உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு இசைமேதை திரு. பி.டி.ஆர். கமலத் தியாகராசன் தலைமை வகித்தார். திரு. பழ. நெடுமாறன், ஏற்புரை நிகழ்த்தினார்!
- நன்றி : தினமணி 29, 30-3-06, 2-4-06.

தமிழ்ப்பேரறிஞர் ந.சி. கந்தையாபிள்ளை

- தமிழவேள் இ.க. கந்தசாமி

ஈழத்திருநாடு, பண்டைய புராண இதிகாசங்களிலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப் பெற்றுள்ளது. திருமூலர் இந்நாட்டைச் சிவபூமி எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைப் போல ஈழத்திருநாடும் பண்டைக்காலம் முதல் தமிழ்மொழிக்கும் சிவவழிபாட்டுக்கும் நிலைக்களனாக இருந்து வருகிறது. ஈழத்திருநாடு, நிலப்பரப்பிற் சிறியது. எனினும் தமிழ், சமயம் ஆகியவற்றின் வளர்ச்சிகளுக்குப் பெரும்பணிகள் செய்துள்ளது. பெரும்புலவர்களும் அறிஞர்களும் இத்திருநாட்டில் வாழ்ந்து தமிழ் வளர்ச்சிக்குச் சமய வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப் பெரும் பணிகள் செய்துள்ளனர்! இத்தகைய பேரறிஞர்களுள் தமிழ்ப்பேரறிஞர் ந.சி. கந்தையாபிள்ளையும் ஒருவர்.
இவர் யாழ்ப்பாணத்துக் கந்தரோடை என்னும் சிறப்பு மிகு ஊரில், நன்னித்தம்பி சின்னத்தம்பி என்பவருக்கு மகனாக 1893ஆம் ஆண்டு பிறந்தார். தமது இளமைக்கல்வியைத் தம் ஊர்த் தமிழ்ப் பாடசாலையிற் கற்றார். ஆங்கில மொழியையும் நன்கு கற்றார். தொடக்கத்தில் தம் ஊர்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்பு மலேசியா சென்று புகை வண்டி நிலைய அதிபராகப் பணிபுரிந்து, மீண்டும் தம் ஊருக்கு வந்தார். தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளைத் திருமணம் செய்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உளர்.
மறைமலையடிகள் 1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் “தமிழ் நாகரிகம்” பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார். இச்சொற்பொழிவு, ந.சி. கந்தையாபிள்ளையின் உள்ளத்தை மிகக் கவர்ந்தது. சொற்பொழிவு நிறைவில் இவர்அடிகளாரிடம் சென்று அச்சொற்பொழிவை நூலாக வெளியிடும்படி வேண்டியதோடு இதனை வெளியிடுதற்கு உரிய பணத்தைத் தமது நண்பர்களின் உதவியோடு அடிகளிடம் கொடுத்தார். நூல் வெளிவரநிதி உதவிய இவரது பணியைப் பெரிதும் பாராட்டி “வேளாளர் நாகரிகம்” என்னும் தமது நூல் முன்னுரையில் அடிகளார், எழுதி உள்ளார். தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் இவர் வைத்திருந்த பெரும் பற்று இதனால் புலனாகிறது.
மறைமலையடிகளின் சிறப்புச் சொற்பொழிவினால் தமிழ் ஆர்வம் பெற்ற இவர், தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆகியவற்றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இத்தகைய ஆராய்ச்சிக்கு ஈழநாட்டில் தக்க வாய்ப்புகள் இல்லாமையால் தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டார். உலக நாடுகளில் உள்ளவர்கள் தமிழ்மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் வரலாறு, இறைவழிபாடு ஆகியவை பற்றி எழுதிய நூல்களை ஆராய்ந்தார். இவர் பெற்றிருந்த ஆங்கில அறிவு, இதற்குத் துணை ஆகியது. மேற்கூறிய துறைகளுக்குத் தக்க ஆதாரமான பகுதிகளைக் குறித்துக் கொண்டார். மேலும் இவற்றிற்கு உதவ வல்ல தொல்பொருள் ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டார்.
இவை அனைத்தையும் பயன்படுத்தித் “தமிழ்மொழி, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழகம், தமிழ் இந்தியா, திராவிட நாகரிகம், சிவவழிபாடு, முச்சங்கங்கள், சிந்துவெளி நாகரிகம். தமிழர் ஆரியர் கலப்பு” ஆகிய அரிய நூல்களை எழுதி வெளியிட்டார். முதலில் இப்பணிக்காக ஒற்றுமை நிலையத்தை நிறுவிப் பணி செய்தார். பின்பு முத்தமிழ் நிலையமும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் இவரின் சில நூல்களை வெளியிட்டன. பின்பு ஆசிரிய நூற் பதிப்புக்கழகம் இவரது நூல்களை வெளியிட்டது. இவரது நூல்கள் தமிழின் தொன்மையையும் தமிழர் நாகரிகத்தின் சிறப்பையும் விளக்குவன. உலகத் தொடக்க காலத்தில் தமிழ்மொழியும் தமிழினமும், உலகம் முழுவதும் பரவி இருந்தன என்பதைத் தக்க பல சான்றுகளோடு தெளிவு படுத்தியுள்ளார். தமது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக வெளிநாட்டறிஞர்கள் எழுதியுள்ள பகுதிகளைத் தம் நூல்களில் அடிக்குறிப்பாகவும் பிற்சேர்க்கையாகவும் இணைத்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் காணப்படும் மிகத் தொன்மையான உருவங்களையும் தம் நூல்களில் வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்தும் தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை தரும் உயரிய ஆக்கங்கள், தொடக்கத்தில் இவரது ஆராய்ச்சிகளைப் பலர் ஏற்கவில்லை. ஆனால் நாளடைவில் அறிஞர் பலர், இவர் எழுதிய ஆராய்ச்சி முடிவுகளின் வழியில் நூல்களை எழுதியுள்ளனர். வட அமெரிக்கக் கொலரடோப் பள்ளத்தாக்கில் அழிவுற்ற நிலையில் மிகப்பழைய சிவாலயம் உள்ளது என முதலில் வெளிப்படுத்தினார். திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகத்திலும் உயர்ந்ததும் பழைமையானதும் என்பது இவரது உயரிய கோட்பாடு ஆகும்.
இவரது ஆராய்ச்சி முடிபுகளை, மா. இராசமாணிக்கனார், கா. அப்பத்துரைப்பிள்ளை, பாரதிதாசன், ஈ.வெ.ரா. ஆகிய பேரறிஞர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவே தாம் இந்நூல்களை எழுதியதாக இவர் தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இவ்வகை நூல்களே அன்றி வேறு பலதுறைகளில் தம் மனஉணர்வுகளையும் ஆற்றலையும் பயன்படுத்திப் பயன்தரு பலநூல்களை எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் வேண்டும். இந்நூல்களை அறியாதவர்கள் தமிழராகார் என்பது அறிஞர் ஒருவர் கருத்து. இவரும் இக்கருத்து உள்ளவர். ஆகவே சங்க இலக்கிய நூல்களைக் கற்றோரேயன்றி ஏனையோரும் அறிதல் வேண்டும் என்னும் ஆர்வத்தினால் செய்யுள் அமைப்பில் உள்ள சங்க இலக்கியங்கள் அனைத்தையும் அச்செய்யுள் அமைப்பின்படி உரைநடையில் எழுதி வெளியிட்டார். சைவ சமய அறிவைச் சைவமக்களிடையே பரப்ப எண்ணிய நாவலர், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதி வெளியிட்ட பணியை, இவரது இப்பணி உணர்த்துகிறது.
புறநானூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறப்பொருள் விளக்கம் முதலிய உரைநடை நூல்களை மேற்கூறிய நோக்கத்தோடு இவர் வெளியிட்டுள்ளார். பண்டிதரே அன்றிப் பள்ளிச் சிறார்கள் இந்நூல்களை அறிய வேண்டும் என்பதற்காக இந்நூல்களைத் தாம் எழுதியுள்ளதாகப் புறப்பொருள் விளக்கம் என்னும் நூலில் இவர் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளின் பயன்பாடு நோக்கி திருக்குறளுக்கு அரிய உரை எழுதி இவர் வெளியிட்டுள்ளார். தமிழகச் சான்றோர் எழுதிய திருக்குறள் உரைக்கும் இவ் ஈழத்து அறிஞர் எழுதிய உரைக்கும் நுட்பமான வேறுபாடுகள் உள. திருக்குறள் முதல் நான்கு அதிகாரங்களையும் பரிமேலழகர் முதலியோர் பாயிரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியம் செய்யுள் இயலின் வழி இதனை இவர் வாழ்த்தியல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ந.சி. கந்தையாபிள்ளை அகராதித்துறையில் மற்றெவரும் செய்யாத அளவு மிகப் பெரும்பணி செய்துள்ளார். செந்தமிழ் அகராதி, திருக்குறள் அகராதி, புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி என்பன இவர் எழுதி வெளியிட்ட அகராதி நூல்கள். இவ் அகராதிகள் தனித்துவமான சிறப்பும் பயன்பாடும் உள்ளவை. இவற்றுள் காலக்குறிப்பு அகராதி இவரது உன்னதமான ஆக்கமாக விளங்குகின்றது.
இவரது பிறதுறை நூல்களுள் ஒன்று ‘பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்’ என்பது. இந்நூலில் பழங்காலப் பெண்கள், சமூகத்தில் பெற்றிருந்த உயர்நிலையை எழுதியுள்ளார். இவர் எழுதிய இன்னொரு நூல் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்பது. மக்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்நூல் பயன்படும் என இவர் எழுதியுள்ளார். யாழ்ப்பாணச் சங்கத்தலைவர் ஒருவர் இந்நூலைப் பாராட்டியுள்ளார். பல்வேறு குலங்களில் நிலவியிருந்த பழக்க வழக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இவர் எழுதிய இன்னொரு நூல் ‘றொபின்சன் குருசோ’ என்பது, இவர் வரலாற்று ஆராய்ச்சியில் மிக ஈடுபாடு உள்ளவர் என்பதும் பிரயாண இலக்கியத்தை அறிமுகம் செய்வதில் ஆர்வம் உள்ளவர் என்பதும் புலனாகின்றன.
இவர் எழுதிய ‘அறிவுரைக்கோவை’. ‘உங்களுக்குத் தெரியுமா’ ஆகிய இரு நூல்களும் இவரின் அறிவு நிலைப்பாட்டை உணர்த்துவன. இவ்இரு நூல்களும் இவரது உன்னதமான படைப்புகள். இவ்வுலகில் உயிர் உள்ளன உயிர் இல்லாதன ஆகிய அனைத்தையும் பற்றிய எல்லாத் தகவல்களும் இந்நூல்களில் உள்ளன. இந்நூல்களில் இல்லாதன எவையும் இல்லை எனக் கூறக்கூடிய அளவுக்கு ஒரு நிறைவான பணியை அறிஞர் ந.சி. கந்தையாபிள்ளை நிறைவு செய்துள்ளார்.
இவர் அறுபதுக்கு மேலான மிக அரிய நூல்களை எழுதியுள்ளார். பலர் சேர்ந்து எழுதக்கூடிய நூல்களை இவர் தனித்து எழுதி நிறைவு செய்துள்ளார் என்பதை எண்ணும்போது இவரது வியத்தகு ஆற்றல் புலனாகிறது. இவரது அனைத்து நூல்களும் உயர்ந்து விளங்குகின்றன. இவரது நுண்மாண் நுழைபுலம் கடலிலும் பரந்தது. மலையிலும் உயர்ந்தது. தமிழுக்கும் தமிழுலகிற்கும் என வாழ்ந்த இவர் 1960இல் இலங்கை வந்து 1967இல் அமரர் ஆனார். 74 ஆண்டுகள் வாழ்ந்தார். இவருடைய மகள் கனடா சென்றார். இவருடைய பிள்ளைகள் இவரது நூல்களைப் பாதுகாக்க முன்வரவில்லை. செந்தமிழ் அகராதியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. ஏனைய நூல்களைத் தமிழகப் பதிகப்பகம் ஒன்று வெளியிட்டு உதவியுள்ளது.
வடமொழிக்கும் ஆரிய இனத்திற்கும் உயர்வும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் தாழ்வும் கூறும், பல்வேறு கதைகளும் செய்திகளும் ஆரியரால் எழுதப்பெற்றன. இவை வரலாற்று ஆய்வுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத இவற்றை எதிர்த்த மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை போன்ற அறிஞர்களைப் போல இவர் மிக வேதனையுற்றார். தமிழர் அகக் கண்களைத் திறக்கவே தமது இந்நூல்களை எழுதுவதாக இவர் குறிப்பிட்டுள்ளார். தமிழையும் தமிழினத்தையும் பாதுகாப்பதற்காகத் தம் வாழ்க்கையை ஈடுபடுத்தினார் இவர். தமிழையும் தமிழினத்தையும் உயர்த்த முயன்ற தமிழ்ப் பேரறிஞர்களுள் இவரும் ஒருவர். ஆனால் ஏனைய அறிஞர்களிலும் பார்க்க மிகமேலான பெரும் பணிகள் செய்துள்ளார்.
தம் பெரும் பணியை நிறைவு செய்ததற்காகப் பெரும் ஆராய்ச்சி நூல்களையும் பெரும் அறிவியல் வகை நூல்களையும் எழுதித் தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். இவரது நூல்களினால் இற்றைத் தமிழினம் அறியாமையில் இருந்து விடுபட்டு வருங்காலத்தில் உயர்வும் முதன்மையும் பெறும். இத்தமிழ்ப் பேரறிஞர், தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெரும் எழுச்சியும் மறுமலர்ச்சியும் தந்த தவத்திரு மறைமலையடிகளார் போலத் தமிழிலும் தமிழினத்திலும் தமிழகத்திலும் சிவநெறியிலும் பெரும் பற்று உள்ளவர். இவர் தம் பெரும் பணிகளினால் ஈழத்திற்கு, உலகில் பெரும்புகழ் பெற்றுத் தந்துள்ளார். இவர் ‘ஈழத்தின் மறைமலையடிகள்’ என்போம். இவர் தமிழ்ப் பெரும் பணியில் ஈடுபடக் காரணமாக இருந்தவர் அடிகளாரே ஆவர்.
இப்பேரறிஞரைத் தமிழுலகு போற்றவும் இவர்வழி வாழவும் பெரிதும் கடமை பெற்றுள்ளது.
__________

இன்றமிழ்ப் பணியே, என்றலைக் கடனே

[முனைவர் ச சாம்பசிவனார்]

“நாவலர் பாரதியாருக்கு மதுரைநகரில் சிலை வைக்க வேண்டும்” என்ற எமது தீர்மானம், மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் போது நிறைவேற்றப் பட்டது. மதுரையிலிருந்து நாவலர் வாழ்ந்த பசுமலைக்குச் செல்லும் சாலையில், பழங்காநத்தம் அருகே மூன்று சாலைகள் கூடுமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு கா. காளிமுத்து ஆவார். “நூற்றாண்டுவிழாவைத் தமிழக அரசு கொண்டாடவேண்டும்” என்ற தீர்மானத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, சென்னை இராசாசி மண்டபத்தில் விழாவைக் கொண்டாடியது. மதுரை மேயர் திரு. எஸ். முத்து தலைமைதாங்க, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், முனைவர் ஒளவை து. நடராசனார் ஆகியோருடன் யானும் கலந்து கொண்டு உரையாற்றினேன். நாளிதழ்களில் தமிழக அரசே விளம்பரமும் செய்திருந்தது.
இவ்வகையில் எனது பெருமுயற்சியால், சேதுபதி மேனிலைப் பள்ளி அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவின் போது போடப்பட்ட தீர்மானங்களில் மேற்குறித்த இரண்டு நிகழ்வுகள் நிறைவேற்றப்பட்டன என்பது மகிழ்ச்சிக்குரியது. நாவலர் பாரதியார் நூல்களை மீண்டும் அச்சுக்குக் கொண்டு வந்தும் போதிய பலன் கிட்டவில்லை. பொதுநூலக இயக்ககமும் அப்போது வாங்கவில்லை; ஏனையோரும் விரும்பினார்களில்லை. இதனால் நாவலர் புத்தக நிலையத்திற்கு நட்டந்தான்!
இதற்குகிடையில் பசுமலையில் இருந்த திருமதி. வசுமதி அம்மாள் பாரதி, தம் இருப்பிடத்தைச் சென்னைக்கு மாற்றி விட்டார். டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரன் இல்லத்தில் குடியேறி விட்டார். அறப்பணிக்குழுத் தலைவர் டாக்டர் சோ. இராசாராம் பாரதியாரும் இயற்கை எய்திவிட்டார். திரு சோ. இலக்குமிரதன் பாரதியார், அறப்பணிக்குழுத் தலைவர் பொறுப்பேற்றார். அவர் சென்னையி லிருந்ததாலும் அவரைக் கண்டு அறப்பணிக்குழு பற்றிப் பேசவோ, செயலாற்றவோ இயலாமையாலும் இக்குழுவின் செயல்பாடுகளில் சிறிது தேக்கநிலை ஏற்பட்டது. எனவே ‘நாவலர் பாரதியார் இலக்கிய மன்றம்’ என்றதோர் அமைப்பை உருவாக்கினேன். பண்டித மீ. கந்தசாமிப் புலவர் இதன் தலைவர்; யான் - செயலர்.
இம்மன்றத்தின் சார்பில், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் பல இலக்கியக் கூட்டங்கள் நடத்தினேன். யான், தொடங்கிய அருட்பா அச்சகம் மதுரை நகரில் மேலப்பொன்னகரத்தில் செயல்பட்டது. என் இளையமகன் சா. திருமாவளவன் அதனைக் கவனித்து வந்தான். யான் குடியிருந்த வீடோ, சிறிது தொலைவில் மேலமாசிவீதியருகே இருந்தது!
ஓர் இலக்கியக் கூட்டம்; முனைவர் வ.சுப. மாணிக்கனார் பேசுவதாக அழைப்பு, அச்சகத்தில் அடிக்கப்பட்டது. மெய்ப்புப்படி (புரூப்) திருத்தும் பொருட்டு அச்சகத்தில் (26-7-1986) இருந்தேன். என் துணைவி மனோன்மணிக்கு உடல் நலமில்லை எனத் தொலைபேசிச் செய்தி; விரைந்து வீட்டுக்கு வந்தேன்; நெஞ்சுவலியால் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தாள்; மாடி வீடு; அவளைத் தூக்கிக் கீழே இறக்கிக் காரில் படுக்கவைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ‘கடுமையான இருதய வலி’ (ஆயளளiஎந யவவயஉம) என்றனர். பிழைக்க வாய்ப்புண்டு என்றனர்; காத்துக்கிடந்தோம். சிலமணி நேரத்தில், யாம் கண்ணிற் காணாதபோது, மருத்துவமனைத் தனியறையில், உயிர் நீத்தாள்!

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் . . . !

முனைவர் ச. சாம்பசிவனார்

[சென்ற இதழின் தொடர்ச்சி . . .]

தமிழ் இலக்கியங்களில், ‘யவனர்’ எனும் சொல், பரவலாகக் காணப்படுவதாம். இச்சொல், கிரேக்க, உரோமானியர்களைக் குறிப்பதாகும். இவர்கள், பாண்டிய நாட்டு அரசவை வாயில்களில், காவல் காத்து நின்றதாகவும் தெரிகின்றது. “யவனர்கள், நல்ல குப்பியில் கொண்டுவந்து கொடுத்த குளிர்ந்த - நறுநாற்றத் தேறலைப் பொன்னாலான கலத்தில் ஏந்திய” செய்தியைப் புறநானூறு கூறும்:
“யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி” (புறம் 56 : 18-19)
இவை போன்ற சான்றுகள் எண்ணில் பலவாக உள்ளன. இவற்றால், கிறித்துப் பிறப்பதற்கு நெடும் பல்லாண்டுகட்கு முன்பிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை, தமிழகத்தை ஆண்ட முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியின் மாட்சியும், தமிழ்மொழி மேன்மையும் தமிழர் நாகரிகமும் ஒருவாறு உணரலாம்.
தமிழக வீழ்ச்சி
ஆனால், இத்தகு ஏற்றமும் உயர்வுங் கொண்ட பண்டைத் தமிழக மூவேந்தர் ஆட்சி, கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின், வீழ்ச்சியுறத் தொடங்கியது. நாட்டின் வீழ்ச்சியால் தமிழின வீழ்ச்சியும்; தமிழின வீழ்ச்சியால் தமிழ்மொழி வீழ்ச்சியும் ஏற்பட்டதில் வியப்பில்லை! இதற்கான காரணத்தை ஆராய்வது ஓரளவு பயனளிக்கும்.
“மதுரைக் கடைச்சங்கம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் முடிவெய்தியது. பின் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடையில், தஞ்சையைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய ‘விசயாலயன்’ வரை, சோழர் செய்திகள் தெரியவில்லை! கி.பி. 4,5ஆம் நூற்றாண்டுகளில், நம் தமிழகம் ‘களப்பிரர்’ என்ற ஒருவகையாரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது!” என்கிறார் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். (‘பிற்காலச் சோழர் வரலாறு’ பக். 4,5)
இக் ‘களப்பிரர்’ பற்றி வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் இவர்களது ஆட்சிக்காலம், ‘தமிழகத்தின் இருண்ட காலம்’ என்பதில் ஐயமில்லை! இக் களப்பிரர் கொடுமைகளினின்று தமிழகத்தை மீட்ட பெருமை, பாண்டியன் கடுங்கோனுக்கு உரியது! இப்பாண்டியனது ஆட்சிக்காலம் கி.பி. 590-620 (கே.கே.பிள்ளை, தெ.இ. வரலாறு)
“பழைய காலம் முதல், கி.பி. 300 வரை, தமிழகம், தமிழ் வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தது. கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பெரும்பகுதி ‘பல்லவர்’ என்ற அயல் அரச மரபினரால் ஆளப்பட்டு வந்தது” என்ற உண்மையை மா. இராசமாணிக்கனார் விரிவாக விளக்குவார் (‘தமிழக ஆட்சி’, ப.1). கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரை ஆண்ட பிற்காலச் சோழராட்சியில், தமிழ் மீண்டும் புத்துயிர் பெற்றது. பின்னர் முகமதியர் படையெடுப்பு; நாயக்க மன்னர் ஆட்சி; மகாராட்டிரர் ஆட்சி; ஆங்கிலேயர் ஆட்சி என ஒன்றன்பின் ஒன்றாக நம் நாட்டை ஆண்டவர் அயலாரேயாவர்!
இத்தகு வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணிப் பார்த்தால் பின்வரும் சில உண்மைகள் புலனாகும்:
தமிழர்களுக்குள் ‘ஒற்றுமையின்மை’யே அடிப்படைக் காரணமாகும். சங்க இலக்கியங்களைக் கூர்ந்து பார்த்தால் இவ்வுண்மை தெற்றெனத் தெரியவரும்.
சேர, சோழ, பாண்டியப் பேரரசர்கள், புகழுடன் நாட்டை ஆண்டவராயினும், அவர்கள் தங்களுக்குள்ளேயே அழுக்காறு கொண்டு அடிக்கடி போர் நிகழ்த்தியுள்ளனர். ‘யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை’ என்ற சேர அரசனை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ பிணித்து வைத்திருந்தான். (புறம். 17) இதே பாண்டியனோடு, சேர, சோழ மன்னர் இருவரும் குறுநில அரசர் ஐவருமாக எழுவர், ஒரு களத்தில் போர் செய்து தோற்றனர். (புறம் 19) ‘பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி’ என்பான், “தண்டமிழ் பொது எனப் பொறாஅன்” (புறம் 51) அஃதாவது, “இத்தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று எவரேனும் கூறினால் பொறுக்கமாட்டான்; நாடு முழுதும் தனக்கே உரிமை என்று எண்ணுவான்” என்பதாம். ‘சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்’ என்பவனும், ‘சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்பவனும் ‘போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தனர் எனக் ‘கழாத்தலையார்’ என்னும் புலவர் குறிப்பிடுகின்றார். (புறம். 62) இவ்வாறே ‘சேரமான் பெருஞ்சேரலாதன்’ என்பான். ‘சோழன் கரிகாற் பெருவளத்தானோ’டு பொருது, புறப்புண் ஏற்று, அதற்காக நாணமுற்று, வடக்கிருந்தான் என்கிறது ஒரு புறப்பாட்டு. (புறம். 65) ‘சேரமான் கணைக்காலிரும் பொறை’ என்பான், ‘சோழன் செங்கணானோடு’ போர் செய்தான்; தோற்றுப் போனான்; சோழனால் சிறை வைக்கப் பெற்றான்; சிறையில் ‘தண்ணீர் தா’ என்று கேட்கக் காலந் தாழ்த்துப் பெற்றமையால், மானங்கொண்டு, அதனைப் பருகாது உயிர்துறந்தான்! (புறம். 74)
இஃது இங்ஙனமிருக்க, ஒரு குடியிலே பிறந்த மன்னர்கள் கூடத் தங்கட்குள் கலாம் விளைத்த செய்தியும் உண்டு.
சோழன் நலங்கிள்ளி என்பவன், பாண்டிய நாட்டிலிருந்த ஏழு அரண்களை அழித்தான் என்பது தவிரத் தன் தாயத்தாரோடு பகைத்து, அவர்கள் இருந்த ஆவூர், உறையூர் ஆகியவற்றையும் முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளிக்கும் இவனுக்கும் நடந்த போரைத் தடுப்பதற்காக முன்னின்ற ‘கோவூர் கிழார்’ என்னும் புலவர், “நும்மில் எவர் தோற்பினும், தோற்பது நும் சோழர்குடியே!” என அறிவுரை பகர்ந்ததைப் புறம் கூறும். (புறம். 4.5)
இவ்வாறு, இம்முடியுடை மூவேந்தரும், தமது பேராண்மையைக் காட்டத் தங்கட்குள்ளேயே போர் செய்து மாண்ட வரலாறு ஒருபுறமிருக்க, இம்மூவேந்தரும் ஒன்றுபட்ட ஒருநிலையினையும் காணமுடிகின்றது. ஆனால் “அவ் ஒற்றுமை எதற்கு? எந்த வேற்றுநாட்டு மன்னனைக் கொல்ல?” என்ற கேள்வி எழுந்தால் தமிழர் தலை குனியத்தக்க விடைதான் கிட்டும்! புலவர்களால் ஒருங்கே பாராட்டப்பட்ட ‘பாரி’ என்னும் வள்ளல்மீது அழுக்காறு கொண்ட மூவேந்தரும் ஒன்று கூடினர்; அவனது பறம்பு நாட்டின் மீது படையெடுத்தனர். ஆயினும் வெற்றி பெற இயலவில்லை!
“நளிகொள் முரசின் மூவிரு முற்றினும்” (புறம். 105)
“கடந்தரு தானை மூவிருங் கூடி
உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே!” (புறம். 110)
என்னும் கபிலர் வாக்கால் இதனை உணரலாம். இம் மூவேந்தரும் வஞ்சனையால் பாரியைக் கொன்றுவிடப், பாரியின் இரண்டு பெண்மக்களும், அழுது அரற்றிய அவலநிலையைப் புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.
“வென்றெறி முரசின் வேந்தம் எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!” (புறம். 112)
என்பது அம்மகளிர் புலம்பல்!
‘சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனு’ம், ‘பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி’யூம் ஒன்று சேர்ந்து இருப்பதைக் ‘காரிக் கண்ணனார்’ என்ற புலவர் கண்ணாரக் கண்டு, அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். அவர்கள் இருவர்க்கும் ‘செவியறிவுறூஉவாகச்’ சில சொன்னார். அச் சொற்கள், இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை!
“ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்! இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த, இப் பயங்கெழு, மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே! . . . .
. . . இடைபுகற்கு அலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்க! நும் புணர்ச்சி” (புறம். 58)
என்பதே புலவர் அறிவுரை. “நீ (சோழன்) தண்புனல் காவிரிக் கிழவன்! இவனே (பாண்டியன்) பஞ்சவர் ஏறு! நீ, உறையூர் வேந்தன்; இவன், ‘தமிழ்கெழு கூடல்’ வேந்தன். உங்கள் காட்சி, பலராமனும் திருமாலும் ஒன்றாக இருந்தாற் போல் உளது. இதைவிட இனிய எமக்கு உண்டோ? ஒன்று சொல்வேன்; கேட்பீராக! நுமக்குள் ஒருவீர், ஒருவீர்க்கு உதவுவீராக! இந்த நிலையினின்று வேறுபடாமலிருப்பீராயின், கடலால் சூழப்பட்ட உலகங்கள் அனைத்தும் உங்கள் கையகப்படுதல் உண்மை! ஆனால், நும்மிடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலோருடைய சிறப்பில்லாத மொழியைக் கேளாதீர்! இன்று போலவே என்றும் நும் நட்பு இருப்பதாக!”
ஒற்றுமையின்றிப் புறங்கூறுவார் பேச்சினைச் செவிமடுத்துத் தமக்குள் போருடற்றி வீணாக மாண்டுமடிந்த வரலாற்றினை இப்புலவர் பெருந்தகையின் அறவுரை எடுத்துக்காட்டுகின்றது. இத்தகு சான்றோர் ஒரு சிலரே அந்நாளில் இருந்தனர் போலும்!
தமிழக மறுமலர்ச்சி
சங்ககாலத்திற்குப் பின் திடுமென வீழ்ச்சியுற்ற தமிழகம், மீட்டும், பிற்காலச் சோழர் காலத்தில் புதுமறுமலர்ச்சி பெற்றது எனலாம். கி.பி. 11, 12-ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசு, தென்னிந்தியா முழுவதனையும் தனது குடைக்கீழ் ஆண்டது.
சோழமன்னருள் மிகப் பெரும் புகழ் கொண்டவன் முதலாம் இராசராச சோழனாவான். (கி.பி. 985 - 1014) இவன் தன் படை வலிமையால், காந்தளூர்ச் சாலை (திருவனந்தபுரப் பகுதி) கலம் அறுத்தான்; வேங்கை நாடு, கங்கபாடி, தடிகை பாடி, நுளம்ப பாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம் முதலாயின தவிர, ஈழமண்டலம், இரட்டபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப் பழந்தீவு ஆகிய வெளிநாடுகளையும் வெற்றி கொண்ட வீரவரலாற்றைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவனுக்குப் பின்னர் வந்த முதலாம் இராசேந்திரசோழனும் (கி.பி. 1012-1044) தன் தந்தையைப் போலவே, ‘இடைதுறை நாடு’ முதல் ‘வங்காளதேசம்’ வரை வெற்றிகொண்ட மாவீரனாவான்! இவ்வாறே பிற சோழ அரசர்களும் வெற்றி வாகை சூடிப் பெரும்புகழ் கொண்டனர். (பார்க்க : ச. சாம்பசிவனார், ‘கல்வெட்டுக் கருவூலம்’)
மொழி வீழ்ச்சி
முடியுடை மூவேந்தரது ஆட்சியின் போது, “முடியணிந்து செங்கோலாச்சி அரியணையில் அமர்ந்திருந்தாள் தமிழன்னை! அன்னாரது ஆட்சி நிலை குலைந்த போது, அவளின் நிலையும் தாழ்ந்தது. தமிழர் ஒற்றுமையின்மையால், வேற்றவர் வந்து நுழைந்தனர். “வட ஆரியர் சிறு சிறு கூட்டமாகத் தென்னிந்தியாவில் குடியேறினர்; அரசர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுச் செல்வாக்கோடு விளங்கினர். அவர்கள், தங்கள் பழக்க வழக்கங்களையும், கொள்கைகளையும், தமிழரிடையே புகுத்தினர்” (கே.கே. பிள்ளை, ‘தென்னிந்திய வரலாறு’) இம்மட்டோடு நின்றாரில்லை! ‘வடமொழியே மேலானது’ என்னும் விதையைத் தமிழர் நெஞ்சங்களில் ஆழ ஊன்றி விட்டனர். எதுவாயினும் ‘இது, வடமொழியினின்று வந்தது’ என்று கூறத் தலைப்பட்டனர். தமிழ் எழுத்துக்களினூடே வடசொல்லையும், வடவெழுத்தையும் கலந்து எழுதவும் துணிந்தனர். இதனால் ‘தமிழுக்குக் கேடு’ என்றுணர்ந்த தொல்காப்பியர்,
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே!” (தொல். சொல். 401)
என்ற நூற்பாவினால் தமிழுக்கு அரண் செய்தார். வடமொழிப் பெருங்காப்பியங்களைத் தமிழிற் பாடிய கம்பரும், வில்லிபுத்தூராரும் இவ் இலக்கண விதிகளை மீறவில்லை!
‘சமண சமயம்’ இத்தமிழ்நாட்டில் நுழைந்து வேரூன்றிய போது, சமணர்கள், தமிழின்கண்ணே அளப்பரிய வடசொற்களை நுழைத்து விட்டனர். ‘மணிப் பிரவாளம்’ என்ற புதுநடையை - அஃதாவது தமிழும் வடமொழியும் சேர்ந்த சரிபாதிக் கலப்பு நடையைக் கையாண்டனர்.
இம்மட்டோ? வேறு சிலர், தொன்மைத் தமிழகத்தில் தோன்றிய ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்’ ‘தெய்வப்புலவர் திருவள்ளுவர்’ இவர்களைக் குறித்துக் கட்டுக் கதைகள் புனைந்து, ஆரியப் பார்ப்பனராக்கிவிட்டனர்!

[தொடர்ச்சி அடுத்த இதழில் . . .]